Sunday 27 April 2014

Ikiru(1952)-வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருத்தலுக்குமான வேறுபாடு



           பொதுவாகவே நம்மில் பலருக்கு வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருப்பதற்குமான (Surviving &Living)வேறுபாடு தெரிவதில்லை.அதை நாம்  தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. பலரை பொறுத்தளவில் எந்திரத்தனமாக ஓபீஸ் வேலை, பின்னர் வீடு, பின்னர் மீண்டும் ஓபீஸ் இதுதான் வாழ்க்கை.இதுதான் வாழ்தல் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இது வாழ்தலில்லை.இது உயிர் பிழைத்திருத்தல்/ஜீவித்தல்.
        பொதுவாகவே ஒரு சொல்லாடல் உண்டு “நா பொழப்ப தேடி பட்டணம் போறேன் என்பார்களே ஒழிய “நான் வாழ்வதற்காக பட்டணம் போறேன் என்று யாரும் சொல்வத்ல்லை.காரணம் பட்டணம் என்பதே பணம் சம்பாதிப்பதை தவிர்த்த பிற  “தேவையற்றவைகள்  வெட்டி எறியப்பட்ட  ஒரு இடம்.அதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுதல்,நல்ல காற்று,நல்ல தண்ணீர்,நிதானமான வாழ்க்கை,கூட்டு குடும்பம்  என்பதெல்லாம் அங்கு கெட்ட வார்த்தைகள்.
           இந்தப்படத்தை பொறுத்தளவில் இரண்டு விஷயங்களை இது நெற்றிபோட்டில் அடித்தாற்போல உரக்க உணர்த்துகிறது.
ஒன்று: நகரின் எந்திர ஜீவனம்
இரண்டு: அரசு அலுவலங்கள், அதில் இருக்கும் அரசு ஊழியர்களின் அதிகாரத்திமிர்,பணியில் அலட்சியம்,அங்கு வரும் மக்கள் மீது எரிந்து விழுதல் போன்ற அடாவடி செயல்பாடுகள்.
              கதையின் நாயகன் வாண்டனபி  அரசு அலுவலகம் ஒன்றில் முப்பது வருடமாக வேலை பார்ப்பவர்.படிப்படியாக முன்னேறி இப்போது துறைத்தலைமை(செக்ஷன் சீஃப்) பொறுப்பை அடைந்திருப்பவர்.அங்கிருக்கும் அனைவருமே மனிதத்தன்மையற்ற எந்திரங்களாகவே சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள்(அரசு அலுவலகங்கள் என்றாலே அப்படித்தானே?).குறைகளை மனுவாக எடுத்துகொண்டு வரும் மக்களை அலைகழிப்பவர்கள்.அதாவது “இது இந்த செக்ஷன் இல்லை. அந்த செக்ஷன் போ என்பார்கள்.அங்கே போனால் இதே வசனத்தை வேறுமாதிரி சொல்வார்கள். இப்படியாக சுத்தலில் விட்டு மக்கள் தாங்கள் கொண்டுவந்த பிரச்சனையே மேல் என்று ஓடிவிடுவார்கள்.இதுதான் அவர்கள் வேண்டுவது.அதாவது தங்களின் எந்திரத்தன்மையை குலைக்கும் எதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை.இங்கு மனித நேயம், மனிதத்தன்மை எல்லாம் நகைப்புக்குரிய வார்த்தைகள்.கதையின் நாயகன் வயிற்று வலி என்று மருத்துவமனை செல்கிறார்.   


     மருத்துவர்  'ஒன்றுமில்லை வெறும் வயிற்றுவலிதான்' என்று சொன்னாலும் தனக்கு கேசர் தான் என்பதை அவர் உணர்கிறார்.அப்போதுதான் அவர் வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்கிய தருணம் என்று சொல்லலாம்.மரணம் நெருக்கும் வேளையில்தானே பல பேருக்கு வாழ்க்கையை பற்றிய நினைப்பு வருது...
         
           அவரது மகனும் மருமகளும் அவரின் பென்ஷன் பணம் பிற பெனிபிட்டுகள் ஆகியவற்றை கொண்டு ஒரு நவீன வீடு கட்டிவிட வேண்டும் என்று விவாதிக்கிறார்கள் .மேலும் “தந்தை அனைத்து பணத்தையும் சுடுகாட்டுக்கு தன்னோடு கொண்டு போக போகிறாரா? என்று கேட்க மனைவி சிரிக்கிறார் .பிறகு விளக்கை மகன் ஆண் செய்து பார்த்தால் அவனது தந்தை ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் .நமது அறையில் அவருக்கென்ன வேலை? என்று சலித்து கொள்கிறார் மனைவி.
                   
       தனது மனைவி போட்டோவையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்.அப்போது அவரது மனைவி மற்றும் பிள்ளை சார்ந்த பல்வேறு பழைய நினைவுகள் அவர் கண்முன்வருகிறது.
25 ஆண்டுகால சேவையை பாராட்டி சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

        வாண்டனபி தனக்கு புற்றுநோய் இருப்பதை தனது மகனிடம் சொல்ல முயல்கிறார்.ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் போகவே மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ஐந்து லட்சம் yen களை வங்கியில் இருந்து எடுத்துகொண்டு போகிறார்.
மகனின் மாமா “மனைவி இறந்த பின் உனக்ககாக இருபது வருடங்கள் தனியாக இருந்தவர் இப்போது பெண்ணாசையால் ஓடியிருக்கலாம் என்கிறார்.  
           பாரில் ஒரு எழுத்தாளனை சந்திக்கிறார் “பல மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் மட்டுமே வாழ்வை பற்றி உணர்கிறோம்.வாழ்வை அனுபவிப்பது என்பது மனிதனின் கடமை.இவ்வளவு நாள் நீ வாழ்வுக்கு அடிமையாகி இருந்தாய் இப்போது நீ  அதற்கு ஆசானாக மாறு என்கிறார் எழுத்தாளர்.தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.
                       வாண்டனபி பல நாட்கள் அலுவலகம் செல்லாமல் போகவே கோப்புகள் நூற்றுக்கணக்கில் தேங்கி விடுகிறது.அந்த அலுவலகத்தில் உயிர்ப்போடு வாழ நினைக்கும் ஒரே ஜீவனான டோயோ என்ற பெண்மணிக்கு இந்த எந்திர அலுவகலத்தை விட்டு வெளியேறிவிட நினைக்கிறார்.ஆனால் 'மேலதிகாரி வாண்டனபி கையெழுத்தில்லாமல்  அது நடக்காது' என்று சக ஊழியர்கள் சொல்லவே அவர் வாண்டனபியை தேடுகிறார்.ஒருநாள் வழியில் அவரை எதேர்ச்சையாக சந்தித்து ‘நான் அலுவலக வேலையை ராஜினாமா செய்ய உங்கள் கையெழுத்து தேவை, உதவுங்கள் என்று கேட்க அவர் தன வீட்டுக்கு அழைத்து சென்று கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.ஆனால் இதை பார்க்கும் அவரது மகன்,மருமகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் ‘இந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கத்தான் இவர் இவ்வளவு பணத்தோடு வெளியேறி விட்டார் என்று அவர் போனபின் விவாதிக்கிறார்கள்.
           டோயோவை அழைத்துக்கொண்டு பல இடங்கள் செல்கிறார் வாண்டனபி.தான் சாப்பிட ஆர்டர் செய்த உணவுகளை கூட டோயோவை சாப்பிட சொல்கிறார்.அவளும் ஆர்வமாக அதை வாங்கி சாப்பிடுகிறார்.
இங்கு டோயோவாக நடித்த பெண்ணை பற்றி சொல்ல வேண்டும்.அவரின் கதாபாத்திரம் எப்படி என்றால் அவரை பார்த்தவுடனேயே ஒருவித உற்சாகம் நம்மையும் தொற்றிகொண்டுவிடும்.அத்தகைய ஒரு உற்சாகமான லைவ்லியான கேரக்டர்.நன்றாகவே நடித்துள்ளார்.
 
டோயோ
              அந்தப்பெண்ணிடம் “நீ எப்படி இவ்வளவு உயிர்ப்போடு வாழ்கிறாய்?சாவதற்கு முன் உன்னைப்போல ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும்.உன்னைப்போல் எப்படி இருப்பதென்று சொல் என்கிறார்."நான் தினம் ஜப்பான் குழந்தைகள் விளையாட பொம்மைகள் தயாரிக்கிறேன்(அந்த கம்பெனியில் இவள் வேலை செய்கிறாள்).ஜப்பான் குழந்தைகளோடு விளையாடுவது போலவே எனது வேலையை உணர்கிறேன்" என்கிறாள்.இதை கேட்டவுடன் 'என்னால் சில விஷயங்கள் செய்ய முடியும்' என்று உடனடியாக அலுவலகம் சென்று "அந்த கொசுக்கள் மொய்க்கும் குட்டையை நான் பார்வையிட வேண்டும்" என்று செல்கிறார்.இவர் மேலதிகாரி என்பதால் இவருக்கு கீழே இருப்பவர்கள் வேறு வழியின்று இவரோடு செல்கிறார்கள். 
                இங்கே தமிழ் சினிமா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்கு கேன்சர் என்று சொல்லிட்டா போதும் உடனே "வாழ்வே மாயம்,காற்றடைத்த பை, நாலு பேரு தூக்குவான்" என்று ஏதாவது உபயோகமில்லாமல் உளறி கொண்டிருப்பார்கள்.ஆனால் இங்கே வாண்டனபி இதுமாதிரி அக்கப்போர் எதுவும் செய்யாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
            இவர் அனுமதி மட்டுமன்றி இவருக்கு மேலுள்ள வேறு பல அதிகாரிகள் தயவிருந்தால்தான் இது நடக்கும் என்பதால் ஒவ்வொரு அதிகாரியின் அறை வாசலிலும் தவமாய் இருக்கிறார்.அவர்கள் இவரை எவ்வளவு கேவலபடுத்தினாலும் இவர் அவைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து கெஞ்சுகிறார்."ஏன் இப்படி உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்கிறீர்கள்?" என்று சக அலுவலர் கேட்க "இருப்பது கொஞ்ச நேரம் இதற்கெல்லாம் வருந்த நேரமில்லை" என்கிறார்.ஒருவழியாக பூங்கா அமைக்க அனுமதி கிடைத்து பூங்கா அமைக்கப்படுகிறது.கடைசியாக அந்தப்பூங்காவில் அவர் ஊஞ்சலில் அமர்ந்து கொட்டும் பனியிலும் தனது அபிமான பாடலை பாடியபடியே உயிரை விடுகிறார்.இந்தக்காட்சி படமாக்கப்பட்ட விதம் கண் கலங்க வைப்பதாக உள்ளது.எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் மனதை உருக்கும் வண்ணம் உள்ளது.
மனதை உருக்கும் அந்தக்காட்சி

         அவர் இறந்தபின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று அவரது இல்லத்தில் நடக்கிறது.சக அலுவலக "எந்திரங்கள்" கடமைக்கு உட்காந்திருக்க பூங்காவை சுற்றியுள்ள மக்கள் உண்மையான பாசத்தோடும் கண்ணீரோடும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.அதை பார்த்து அதிர்கிறார்கள் இந்த எந்திரங்கள்.
அப்போது பூங்கா பற்றிய பேச்சு எழுகிறது.நாட்டில் அமைக்கப்படும் பூங்கா எல்லாம் வாண்டனபி அமைத்ததாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று சக எந்திரங்கள் வயிற்றெரிச்சல் படுகிறார்கள்.
"அந்த பூங்கா வாண்டனபியால் நிகழவில்லை.தேர்தல் நெருங்குவதால் நிகழ்ந்துவிட்டது" என்கிறார் ஒரு அலுவலர்.மற்றொருவர் "அவர் இருந்தது பொது விவகார துறை.ஆனால் பூங்காவை அமைத்தது பூங்கா துறை.இவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை" என்று இவ்வாறாக ஆளாளுக்கு தாங்கள் கிரெடிட் எடுத்துகொள்ள முயல்கிறார்கள்.ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாய் போட்டோவில் சிரிக்கிறார் வாண்டனபி.காரணம்  பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டவர் அவரே.
"சிட்டி கவுன்ஸில் மற்றும் துணை மேயர் தேர்தல் நெருங்கியதால் மட்டுமே இதை செய்தனர்.இல்லாவிடில் வாண்டனபியின் கோரிக்கை எல்லாம் சும்மா" என்கிறார் மற்றொருவர்.திடீரென்று அனைத்து ஊழியர்களும் சபதம் எடுக்கிறார்கள் "வாண்டனபி போல நாமும் மக்களுக்கு ஏதேனும் செய்வோம்" என்று.
           அடுத்த நாள் ஊழியர்கள்(எந்திரங்கள்) அலுவலகத்தில் அமர்ந்திருக்க ஒரு சாமானிய பெண் வந்து உதவி கேட்க "இது இந்த்துறையின் கீழ் வராது.வேற டிபார்ட்மென்ட்" என்று சொல்லி அனுப்புகிறார் ஒரு ஊழியர்.மற்றொரு ஊழியர் திடீரென்று பொங்கி எழுந்து நேற்று செய்த சபதத்தை நினைவு கூற முயன்று தோற்று மீண்டும் தனது கோப்புக்குவியலில் மூழ்குகிறார்.அதாவது மீண்டும் அவர்கள் எந்திரங்களாகி விட்டனர்.சபதம் எல்லாம் சும்மா!
            வாண்டனபியாக நடித்தவர் டகாஷி ஷிமுரா.குரசோவாவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவர்(மற்றொருவர் டோஷிரோ மிஃபுனே).குரசோவா இயக்கிய முப்பது படங்களில் 21 படங்களில் நடித்த பெருமை கொண்டவர்.இந்தப்படத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்ட, விரைவில் மரணம் என்பதை உணர்ந்த ஒரு வயதான மனிதாரக வாழ்ந்துள்ளார்.அதுவும் அந்த கண்களில் மரண பயத்தை காட்டும் விதம் இத்தனை வருட வாழ்க்கையில் நாம் செய்ததுதான் என்ன?என்ற கேள்விக்கு பதில் தெரியாமையால் கூனிக்குறுகிய உடல் மற்றும்  மனம் ஆகியவற்றை மிக அற்புதமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
கண்களில் தெரியும் வேதனை
 
             இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள்  உங்கள்  மனதுக்கு பிடித்த ஒரு விஷயத்தை பிறரைப்பற்றி கவலைப்படாமல்  சமீபத்தில் செய்தது எப்போது?

Sunday 20 April 2014

பவரின் அரசியல் நிலைப்பாடு என்ன?

அன்புள்ள வ.ரா,
                               நலமா?(இல்லன்னா என்ன பண்ண போற?-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை?ஒருவேளை வாய்ஸ் கொடுத்தும்  அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமா?உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவரு?நன்றி.                                                                                                                                                                                                                                         -திண்டுக்கல் சகாயம்.

********************************************************************************************
 Hello V.R,
                  Just dropped in to enquire about your beloved and over-rated balloon Powerstar.Why cant he guide people in this election?Is he afraid?
                                                                                                                        -Raj.
***********************************************************************************

Adios amigo VR,
                     Amanecía en el naranjel.Abejitas de oro buscaban la miel.
¿Dónde estará powero star
la miel? -                                                                                    -Juan Miguel
.
***********************************************************************************



அன்பு சகாயம் & ராஜ்&Miguel,
                                                          பவர் மீது கட்டமைக்கப்படும் விஷம பிரசாரங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரின் வளர்ச்சி,பல நூற்றாண்டு காலமாக அவர் உலக மக்கள் நலனுக்கு ஆற்றி வந்த பெரும்பணி இவற்றை எல்லாம் எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்று சிலர் அலைவது தெரியும்.பவருக்கு தேச நலனில் அக்கறை இல்லாதிருந்திருந்தால் ஏன் அவர் சிப்பாய் கலகம்,தண்டி யாத்திரை,ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்க போகிறார்?

இவ்வளவு ஏன் அமெரிக்க சுதந்திர போரிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் பவர்.அவருக்கு இந்த தேசம், அந்த தேசம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது.மக்களின் அன்பு என்ற மகத்தான சக்தி   தேச வரைபடங்களில் சிக்கிவிட கூடாது என்பதே அவர் எண்ணம்.
                         சென்ற தேர்தல் முடிந்த போதே பல அரசியல் கட்சிகள் பவரிடம் "அடுத்த தேர்தலில் எங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்?(அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?இல்லை சும்மா அடிச்சி விடுறியா என்று கேட்பவர்களுக்கு இதோ புகைப்பட ஆதாரங்கள்)....


 
அப்படி இருக்கையில் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.அவர் இந்தியா என்ற வட்டத்துக்குள் மட்டும் இருக்க விரும்பாமல் உலக மக்கள் அமைதி பெற்று வாழ தேவையானவற்றை செய்ய இப்போது நார்வே சென்றுள்ளார்."உலக சமாதானம் என்று வெற்றி பெறுகிறதோ அன்றுதான் நான் பிறந்தநாள் கொண்டாடுவேன்" என்று சூளுரைத்தது பல பேருக்கு தெரியாது.ஆகையால் வெறும் பத்திரிகை ஊடக விஷம பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உண்மையில் அவர் என்ன பணி ஆற்றியுள்ளார் என்பதை வரலாற்று புத்தகங்கள் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.இனி தொடர்ந்து இது போன்ற பொய் கட்டமைப்புகளை உடைக்கும் வண்ணம் பவரின் சிஷ்யர்கள் செயல்படுவார்கள்.

Sunday 6 April 2014

Ishqiya(2010)- நம்பகத்தன்மையற்றவர்களுடன் ஒரு திரை பயணம்

                             பொதுவாகவே வணிக சினிமாக்களின் ஆதார சுருதி என்னன்னா polarization.அதாவது படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில் "இவிங்க எல்லாம் அக்மார்க் நல்லவர்கள்.இவிங்க எல்லாம் அக்மார்க் கெட்டவர்கள்.நீ நல்லவனை வாழ்த்து, கெட்டவனை திட்டு" என்ற ரீதியில் நிறுவப்பட்டுவிடும்.ரசிகர்களின் மனப்போக்கும் அதே போலத்தான் செல்லும்.
            உயிர்மை இதழில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியதாஅல்லது வேறு யாரோ எழுதியதா என்று நினைவில் இல்லை.ஆனால் அந்த quote நினைவில் இருக்கு, " அருவியில் குளித்துகொண்டிருக்கும் நாயகியிடம் சில்மிஷம் செய்யும் வில்லனை அடித்து துரத்திவிட்டு எம்.ஜி.ஆர். அதே செயலை செய்வார்".அதாவது நல்லவன் சில்மிஷம் செய்தால் அது ரொமான்சு.இதே வில்லன் (என்று நிறுவப்பட்டவன்) செய்தால் அது கிரிமினல் குத்தம்.இந்த விதியின் படி அமைந்த சினிமாக்கள் பல்லாயிரம்.
               (spoiler alert) ஹாரி பாட்டர் நாவலில் எனதபிமான கதாபாத்திரம் புரொபசர் ஸ்னேப்தான்.கிட்டத்தட்ட ஏழு நாவல்களிலும் அவரை கொடூர வில்லன் ரேஞ்சுக்கு காட்டி கடைசியில் வந்த டுவிஸ்ட் மிக சுவாரஸ்யமானதும் மனதை உருக்குவதுமாக இருந்தது.அதான் ஒரு எழுத்தாளரின் பலம். திரைக்கதை ஆசிரியரின் பலமும் அத்தகைய கதாபாத்திரங்களை திரைப்படங்களில் உருவாக்குவதே!
              இந்த வகையில் இந்த polarity/polarization ஆகியவற்றை உடைத்த படங்கள் அவ்வப்போது வந்துள்ளன.அரிதாக தமிழிலும்.உதாரணமாக தமிழில் வந்த "நான்" ,"நான் அவனில்லை" போன்ற படங்களை சொல்லலாம்.நாயகன் கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாத படியான செயல்களை செய்தவனை மையபடுத்திய படங்கள் இவை.
              இந்த வரிசையில் ஒரு படம் என்றால் அது Ishqiya.பொதுவாகவே விஷால் பரத்வாஜின் படங்கள் மனித மனத்தின் இருண்ட பாகங்களை படம் பிடித்து காட்டும் தன்மையுடையவை.குறிப்பாக polarisation க்கு உட்படாத கதாபத்திரங்களே அவர் படத்தில் நிறைந்திருக்கும்.உதாரணமாக அவர் இயக்கிய Kaminey படத்தை சொல்லலாம்.இஷ்கியா படத்தை அவர் இயக்கவில்லை.அபிஷேக் சவுபே தான் இயக்குனர்.ஆனால் கதை திரைக்கதை மற்றும் வசனம் வி.பரத்வாஜ்.

              இந்த படத்தில் இரண்டு  திருடன்கள் ,அவர்களை துரத்தும் முஷ்டாக், இவ்விருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் பெண் கதாபாத்திரம்,அவளது கணவன் கதாபாத்திரம்,கணவனின் கூட்டாளி,சாதி "போர்ப்படை"யில் இணைக்கப்பட்ட பதினைந்து வயது "பெரிய மனுஷன்" ஆகிய அனைவருமே நல்லவன்/கெட்டவன் என்ற இரு துருவங்களில் அடையாளம் காணப்பட/காட்டப்பட  முடியாதவர்கள்.அதுதான் இந்த படத்தின் ஆதார பலமே.
               குறிப்பாக  கிருஷ்ணா(வித்யா) கதாபாத்திரம் மர்மமான, எந்த நேரத்தில் எதை செய்வாரோ என்று சந்தேகப்பட வைக்கும் ஒரு கதாபாத்திரம்.Kahaani படத்தில் கூட வித்யாவுக்கு இதே போன்ற "மர்மமான" ரோல்தான்.அதில் படித்த பெண்மணியாக வருவார்.இதில் படிப்பு வாசனையற்ற ஒரு கிராமத்து பெண்மணியாக வருகிறார்.கிராமத்து பெண்மணி என்றாலே ஒரு பாவாடை தாவணியை போட்டுகினு கழுத்து சுளுக்கும் வரை ஒரு புதரு மண்டிய ஒரு மூஞ்சியை பார்த்துகொண்டே செல்லும் மொக்கை தமிழ்ப்பட பெண்மணி அல்ல இவர்.இவருக்கு துப்பாக்கியை குறிபார்த்து சுட தெரிந்துள்ளது.வேன் ஓட்டுகிறார்.தன்னை நம்பி வந்த அர்ஷத் வர்ஸி மற்றும் நஸீர் ஆகியோருக்கு உதவுவது போல உதவி ஒரு கட்டத்தில் அந்த இரு கில்லாடி கிரிமினல்களையே டபுள் க்ராஸ் செய்கிறார்.இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் ஆரண்ய காண்டம்  படத்தில் சுப்புவாக   பார்த்திருக்கலாம் .

                 இந்த படத்தின் அச்சாணி போன்ற கேரக்டர்கள் மூவர்.அர்ஷத் வர்ஸி நஸீர் மற்றும் வித்யா பாலன்.மூவரில் ஒருவர் நடிப்பில் சொதப்பியிருந்தால் கூட படத்தை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி ஆகியிருக்கும்.அப்படி எதுவும் நடக்கவில்லை.மூவரும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.
                 அடைக்கலம் கொடுத்த கிருஷ்ணாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் அர்ஷத்&நஸீர்.இரவில் அவசரத்தில் வந்து தங்கிய நேரத்தில் அவர்கள் வித்யாவை சரியாக பார்க்காமல் தூங்கிவிடுகிறார்கள்.மறுநாள் காலையில் வித்யா ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார்(பாடகி:ரேகா பரத்வாஜ்.விஷாலின் மனைவி).அதில் மயங்கும் நசீர் ரொமான்டிக்காக கண்ணாடியில் தன முகத்தை பார்க்கிறார்.வெள்ளை தாடி இருப்பதை காணும் அவர் அங்கிருக்கும் மை டப்பாவை எடுத்து தனது தாடியில் பூசி கருப்பு தாடியாக அதாவது "தனக்கு இன்னும் வயதாகவில்லை.காதலிக்க தயார்" என்று மறைமுகமாக கிருஷ்ணாவுக்கு புரிய வைக்கவே இந்த கூத்து.நசீர் காதலில் விழுந்ததை உணரும் போது வரும் அட்டகாசமான பாடல் இதோ::
 இந்த பாடலின் இசை, பாடிய Rahat Fateh Ali Khan இன் குரல்,,பாடலை படமாக்கிய விதம் இவை எல்லாவற்றையும் தாண்டி பாடலில் அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நஸீர்..ஆகா..என்னவொரு அற்புதமான காம்பினேஷன்!!
                  ஆனால் உண்மையில் வித்யா அர்ஷதுடன் இருப்பதை நஸீர் 
பார்க்க,அதனால்  இருவருக்கும் சண்டை வர அதனால் அவர்கள் போட்ட கடத்தல் திட்டத்தில்(கிருஷ்ணாவின் கணவரின் கூட்டாளியை கடத்த திட்டம் போடுகிறார்கள்) மிகப்பெரிய சறுக்கல்.அந்த நேரத்தில் கிருஷ்ணா இவ்விருவரையும் டபுள் க்ராஸ் செய்கிறார்.அதன் பின் என்னானது என்பதை திரையில் பார்க்கவும்.
                            அதிள் ஒரு சுவாரஸ்யமான காட்சியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அதுதான் கிருஷ்ணாவின் கணவன் வர்மாவின் கூட்டாளி கேகே என்ற தொழிலதிபர் பற்றியது.அவரை கடத்த அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேர பிரகாரம் ஒரு போர்டில் எழுதுகிறார்கள் மூவரும்.அதில் கோவிலுக்கு சென்றுவிட்டு கேகே வேறெங்கோ செல்வதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.அவரை பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு பழைய ப்யூட்டி பார்லர் என்ற பேரில் இருக்கும் ஒரு கட்டிடம்.பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க..  கேகேயின் மனைவி மாடர்ன் டிரெஸ்சில் கையில் ஒரு கழியுடன் கணவனையும் அவன் கண்களையும் கட்டிபோட்டுவிட்டு  masochism பாணி எழுச்சியை உண்டாக்கி கொண்டிருப்பதும் அதை அடக்க முடியாத சிரிப்புடன் பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து பார்ப்பதும் பின் அதை பற்றிய பேச்சு  வரும்போதெல்லாம் இவ்விருவரும் விழுந்து விழுந்து சிரிப்பதும் இது புரியாமல் காலு விழிப்பதும் டிபிகல் விஷால் பரத்வாஜ் ஸ்டைல் .
                        மற்றபடி குறிப்பிடப்பட வேண்டியது இசை.ஏற்கெனவே இரண்டு பாடல்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.எனதபிமான விஷால் பரத்வாஜ்தான் இசை.அவரின் 7 Khoon Maaf பாடல்களை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.இந்த படத்தின் பாடல்களும் அட்டகாசமானவை.இந்த படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்றார் விஷால்.அது மட்டுமல்லாது
Badi Dheere Jali பாடலுக்காக அவரது மனைவி அற்புதமான பாடகி ரேகா பரத்வாஜும் தேசிய விருது பெற்றார்.அந்த பாடல் இதோ:

பாமரத்தனமான குரலுக்கு சொந்தக்காரர் ரேகா..ராவன்(ஹிந்தி)படத்தில் Ranjha Ranjha பாடலை இவர் பாடியிருப்பார்.இதே பாடலின் தமிழ் வடிவத்தில்(காட்டுச்சிறுக்கி) அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார்.வின்னர் ரேகா தான்.இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு அது தெரியும்


                  மற்றபடி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்ற ஹார்ட் அட்டாக் வரவைக்கும் செய்திக்கெல்லாம் நான் முக்கியதத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த படத்தை தமிழில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தானே அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும்.பார்க்கபோவதில்லை என்று முடிவெடுத்த படம் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?