Thursday 5 June 2014

Drishyam(2013) # காணத்தவறிய காட்சிகள்.

         இந்தப்படம் வந்தபோதே பார்க்க வேண்டுமென்று ஆசை.ஆனால் தியேட்டரில் சப்டைட்டில் வராதே என்பதால் இம்பூட்டு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.இவ்வளவு தாமதமாகிவிட்டதே என்ற எண்ணம் படம் பார்த்து முடித்தபின் ஏற்பட்டது.
                 நாம் காணும் காட்சிகளை எல்லாம் நாம்  உடனடியாக உணராவிட்டாலும் ஆழ்மனதில் பதிந்து விடும்.அதை மிக அற்புதமாக பயன்படுத்திகொண்டிருக்கிறார் இயக்குனர்.ஹிட்ச்காக் சொல்வார் "நான் படம் பார்ப்பவர்களை ஒரு பியானோ போல மீட்ட விரும்புகிறேன்" என்று அதுபோல இங்கே நம்மையும் பயன்படுத்துகிறார் இயக்குனர் ஜீத்து. "முதல் ஒரு மணி நேரம் வீண்" என்று சில மங்குணிகள் சொல்கிறார்கள்.அட பதர்களா அந்த காட்சிகள் இல்லாவிடில் ஜார்ஜின் குடும்ப உணர்வுகளை மனப்போராட்டங்களை நம்மால் உணரவே முடியாமல் போயிருக்கும்.இரண்டே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை.கதை/திரைக்கதை  பற்றியெல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.

                  ஒரு நல்ல திரைப்படம் என்பது ஹாரி பாட்டர் நாவலில் வரும் pensive போல நம்மை உள்ளே இழுக்க வேண்டும்.அந்தப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் சந்தோசம், துக்கம், கோபம், பதைபதைப்பு, வலி அனைத்தையும் பார்வையாளனை உணரச்செய்வதே உன்னத சினிமா.இங்கே படம் துவங்கி சில நிமிடங்களிலேயே நாம் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல உணர ஆரம்பித்து விடுகிறோம்.அவர்கள் சிரிக்கும் போது நாமும் சிரிக்கிறோம்.அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் வரும்போது நாமும் அதை உணர்கிறோம்.உதாரணமாக ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை காவல்துறை விசாரிக்கும் அந்த காட்சியின் முடிவாக அந்த கடைக்குட்டி அனுவை மட்டும தனியே அறையில் அடைத்து மிரட்டும்போது இதயத்துடிப்பு எகிறி நாமே எழுந்து போய் அந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பே இயக்குனர் மற்றும் அந்த கட்சியில் நடித்தவர்களின்(வாழ்ந்தவர்கள்) மிகப்பெரும் சாதனை.

                   "நடிக்கிறேன் பாருடா" என்று அக்கப்போர் செய்யாத அட்டகாசமான நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.அவரின் இரண்டு படங்கள் மட்டுமே ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்(தூவானத்தும்பிகள் மற்றும் நமக்கு பாக்கினும் முந்திரி தோப்புகள்) பிற படங்களை பார்க்காததற்கு சப்டைட்டில் கிடைக்காத பிரச்சனையே முக்கிய காரணம்.அவரின் பிற படங்களையும் தேடிபிடித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இந்தப்படத்தை பார்த்தபோது உண்டானது .மற்றபடி "மோகன்லால் நன்றாக நடித்திருக்கிறார்" என்ற வழமையான வாசகத்தை  சொன்னால் கருட புராணம் படி தண்டனை தான் மிஞ்சும்.

         முப்பது வருடங்களாக பிரபல ஹீரோவாக இருக்கும் ஒருவர் சைக்கிளில் வீட்டுக்கு வந்து செல்கிறார்,வேட்டி/லுங்கி  மட்டுமே அணிகிறார்,மண்வெட்டியை எடுத்து உரக்குழி தோண்டுகிறார், போலீசிடம் திரும்ப கை ஓங்காமல் அடி வாங்குகிறார்.காரணம் அவர் அங்கே பிரபல சீனியர் ஹீரோவாக அல்ல இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற ஜார்ஜ் குட்டியாக மாறிவிட்டார்.தமிழ் சினிமாவில் இதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட முடியாது என்பது தெரிந்ததே.பிரபல சீனியர் ஹீரோன்னாலே ஒரு ஃபார்மேட் .அவர் தமிழ் பாரம்பரியத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாத நவநாகரீக உடையணிந்து வெளிநாட்டு பைக்கில் இரண்டு சக்கரங்கள் இருந்தாலும் ஒற்றை சக்கரத்தில் மட்டுமே வண்டியை ஓட்டி அந்த டயரில் மட்டும் அதிக தேய்மானம் உண்டாக்குதல், "விவசாயியா?ஹீ ஹீ அதெல்லாம் ராமராஜனை செய்ய சொல்லு" என்பார்கள்.ஏன் இங்கே தமிழ் ரசிகர்களின் மன ஓட்டமே எப்படி இருக்கு?ஒரே ஒரு படத்தில் மாடு மேய்ப்பவராக, பால் கறப்பவராக நடித்த ராமராஜனை எந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மேடையிலும் கிண்டல் செய்யாமல் விட்டதில்லை.அதுமட்டுமல்லாமல் எழுபது வயதானாலும் "போங்கம்மா எனக்கு வெக்கமா இருக்கு" என்று தன்னோடு ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கொல்வார்கள்.எப்பைய்யா திருந்த போறீங்க?
                 லால் மட்டுமல்லாது மீனா அந்த இரண்டு பெண் குழந்தைகள் ,எப்படியாவது ஜார்ஜை பழிவாங்கிவிட துடிக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக நடித்த ஷாஜோன்,ஐஜியாக நடித்த ஆஷா சரத் அவரது கணவர், டீக்கடை பாய் என்று ஒவ்வொருவரும் வாழ்திருக்கிரார்கள்.இவர்களில் ஒருவர் நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக ஏதாவது சேட்டை செய்திருந்தாலும் மொத்த படமே வீழ்ந்திருக்கும் .அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.
                  மேலும் குடும்பத்தினரிடையே நடக்கும் அந்த சம்பாஷனைகள் அவ்வளவு இயல்பாகவும் மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.தாய்& மகள்கள் இனைந்து  தந்தையை கிண்டல் செய்வது போல பார்வையை பரிமாறி கொள்ளுதல்,தந்தை "இரவில் விழித்திருந்ததால் டயர்டா இருக்கு" என்று சொல்லும்போது அவரின்  வயதுவந்த மகள் மெல்லிய சிரிப்போடு  அங்கிருந்து விலகி செல்லுதல், அந்த சிறுமி அனு ஆடி கார் கேட்கும் போது அதற்கு மோகன்லால் காரின் பேரை தவறாக உச்சரித்து சொல்லும் பதில் எல்லாமே அட்டகாசம்.ஜார்ஜ், சிறுமி அனுவை பிரம்பால் அடித்துவிட்டு ஈசி சேரில் உட்காரும்போது ஏற்கெனவே அனு அந்த சேரின் கட்டையை எடுத்துவிட்டது தெரிந்து  சிரிப்பது அருமை.எல்லாவற்றுக்கும் மேலாக படம் முடியும் காட்சி என்னை அறியாமல் கை தட்ட  வைத்தது என்று சொன்னால் மிகையாகாது .

                ஜார்ஜ் கதாபாத்திரம் என்னை ஈர்த்த காரணம் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சினிமா மூலமே தெரிந்து கொண்டுவிடுகிறார்.தமிழ் ,ஹிந்தி, இங்க்லீஷ் ஆகிய மொழிகளை சினிமா பார்த்தே கற்று கொண்டிருக்கிறார்.தன் வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்தையும் ஏதேனும் ஒரு சினிமா காட்சியோடு ஒப்பிட்டு அதற்கு தகுந்தாற்போல சாதுர்யமாக முடிவெடுக்கிறார். உதாரணமாக போலீஸ் விசாரணைக்கு அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தை தயார் செய்யும் விதம்.இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.சப்டைட்டிலோடு படம் கிடைக்கிறது.ஒரிஜினில டிவிடியே 110 ரூபாய்தான்.கண்டிப்பாக பாருங்கள் .

           இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக ஒரு செய்தி உலவுகிறது.கமல் நடிக்கிறார், இல்லையில்லை விக்ரம் நடிக்கிறார் என்று பல்வேறு யூகங்கள்.இருவரில் யார் நடிப்பதாக இருந்தாலும் ரீமேக் என்ற பேரில் இதை tone down செய்தல், இரு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மாற்றி ஹீரோ இமேஜுக்கு வேறுமாதிரி சம்பவங்களை அமைத்தல்,போலீஸ் விசாரணை காட்சியில் ஜார்ஜ் குட்டி அடிவாங்குவார் என்பதற்காக அதை நீக்குதல் அல்லது போலீசை திருப்பி அடிப்பது போல ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைத்தல்,ஜார்ஜ் குட்டி  நாலாம் கிளாஸ் என்பதை ஐ ஐ டியில் எம் டெக் என்று மாற்றுதல் தேவையில்லாமல் ஃபாரீன் டூயட் குத்துப்பாட்டு(குறிப்பாக கானா பாலாவின் காதை செவிடாக்கும் இரைச்சல் பாடல்) வைத்தல், ஆக்ஷன் ப்ளாக் வைத்தல், ஃபாரீன் பைக்கில் வந்து சீன போடுதல் போன்ற அக்கபோர்களை எல்லாம் சேர்க்காமல் இயல்பாக எடுக்க முயன்றால் படம் வெற்றி பெரும்.அதை விடுத்து மேற்சொன்ன சேட்டைகள் ஏதாவது செய்தால் மூலப்படத்துக்கே இழுக்கு.