Monday 6 October 2014

ஜீன்சும் பாலியல் குற்றங்களும்....

                              பழைய எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி டாக்குடர் படங்கள் வரை இந்த காட்சி கண்டிப்பாக இருந்தே தீரும்.நாயகி மாடர்ன் டிரெஸ் போட்டுக்கொண்டு வரும்போது சிலர் அவரை கலாட்டா செய்துகொண்டே அவரை நெருங்க   முயல நாயகன் ஏர்ல டைவ் அடிச்சி நாயகியை காப்பாத்திட்டு "பொம்பளன்னா இப்படி டிரெஸ் பண்ண கூடாது..நம்ம கலாச்சாரப்படி டிரெஸ் போட்டிருந்தா இது நடந்திருக்குமா?" என்று முழநீள அட்வைஸ் கொடுப்பார்கள்.நாயகிக்கு நாயகன் மீது காதல் வரும்.அடுத்த சீனில அவர் "கலாச்சாரப்படி" புடவை கட்டிக்கொண்டு வர, அதை பார்க்கும் நாயகன்.கட் பண்ணா டூயட்.அதுல "கலாச்சாரமில்லாத"(நாயகனின் சொல்படி) உடையணிந்து நாயகி ஆட அவர் அங்கங்ககளை நம்ம கலாச்சார காவலர் வரிக்கு வரி வர்ணிப்பார்.
                              சரி கலாச்சார உடை என்றால் என்ன?பெண்களை கலாச்சாரப்படி உடை அணியச்சொல்லும் ஆண்கள் கலாச்சாரப்படி உடை அணிகிறார்களா?உண்மையில் நம் நாட்டு கலாச்சாரப்படி உடையணிய வேண்டுமென்றால் ஆண்கள் இடுப்புல ஒரு லங்கோடு+ஒரு வேட்டி.அம்புட்டுதான் அணிய முடியும்.இந்த சட்டை, டி ஷர்ட், உள்பனியன், ஜட்டி எல்லாம் மேற்கத்திய கலாச்சாரம்தான்.ஷூ, சாக்ஸ், கூலிங்க்ளாஸ் இதைப்பத்தி எல்லாம் சொல்லத்தேவையில்லை.
                            சரி பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணமா?நேற்றுவரை நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் சொல்படி "கலாச்சார" உடையணிந்த பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை காண முடியும்.(அதற்காக மாடர்ன் டிரெஸ் அணிந்தால் தப்பிக்கலாம் என்று சொல்லவில்லை.இவர்களின் கூற்றில் உள்ள பொய்யை நிரூபிப்பதற்கே இந்த வாதம்).

                         நேற்று பிறந்த குழந்தையையும் ரேப் செய்கிறார்கள்.எண்பது வயது மூதாட்டியையும் ரேப் செய்கிறார்கள்.பக்கத்து நாட்டில் இறந்த பெண்களை கூட புணர்ந்த இனவெறி ராணுவம்பற்றி உலகறிந்தும் கள்ள மௌனம் சாதிக்கிறது.அதற்கெல்லாம் இந்த கலாச்சார காவலர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
    -"இரண்டு வயது குழந்தை அம்மணமாக இருந்ததாலேயே ரேப் செய்யப்பட்டது" என்று சொன்னாலும் சொல்வார்கள்.
-எண்பது வயது மூதாட்டி "கலாச்சரப்படிதானே உடையணிந்திருப்பார்?அவர் ஏன் ரேப் செய்யப்பட்டார்?
-"இறந்து போன பெண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை.அதனால் அவர்கள் புணரப்பட்டனர்" என்றும் இந்த காவலர்கள் சொல்வார்கள்.
                              மற்றொரு வாதம் "ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு பாலியல் குற்றங்கள் இருந்ததா?இல்லை.ஏன்?பெண்கள் கலாச்சாரப்படி உடையணிந்தார்கள்" என்பதும் இவர்கள் வாதம்.இது உண்மையா?
                           பாலியல் குற்றங்கள் மட்டுமா ஐம்பது வருஷத்தில் பெருகி இருக்கு?ஊழல்,திருட்டு,கொலை,லஞ்சம் இவைகூடத்தான் பெருகியிருக்கு.அதுக்கு என்னப்பா பின்னணி காரணம் வைத்திருக்கிறீர்கள் காவலர்ஸ்?...
                   குற்றங்கள்,அது எந்த குற்றமாக இருப்பினும் அதிகரித்துள்ளதற்கு காரணம் குப்பையான கல்விமுறை,பிள்ளைகளை வளர்க்கும் விதம்,சமூக சீரழிவு,குப்பையான சினிமா, நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கமே ஒழிந்து போனது,குடும்ப வாழ்க்கை சிதைவு  போன்று பல்வேறு காரணங்கள்.ஆனால் இவர்கள் ஏதோ இல்லாத காரணத்தை பிடித்து தொங்கி கொண்டிருப்பதில் பேரானந்தம் காண்கிறார்கள்..
            காலம் காலமாக மதம் இனம் சாதி மற்றும் இன்னபிற அம்சங்களை கொண்டு அதிகமாக ஒடுக்கப்பட்டது பெண்கள்தான்.தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழான நிலையில் பெண்கள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

           "கலாச்சாரப்படி" உடையணியும் பல்வேறு கடுமையான சட்டங்கள் இருக்கும் அரபு நாடுகளும் இதற்கு விதிவிலக்கில்லை எனும்போது பிரச்சனை பெண்களிடம் இல்லை என்பதை இன்னும் உணர மறுப்பதேன்?சமீபத்தில் இரானில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணை தூக்கில்   போட்டு(தான் ரேப் செய்யப்பட்டோம் என்பதற்கான நான்கு சாட்சிகளை அவர் காண்பிக்க முடியாததால்)  "நியாயத்தை" நிலைநாட்டினர்.இதை எந்த காவலர்ஸ் விமர்சித்தார் என்று தெரியவில்லை.எந்நேரமும் புரட்சி நரம்பை சொறிந்துகொண்டிருக்கும் வினவு உட்பட.கடும் சட்டங்கள் கொண்ட சவுதியில் 23% குழந்தைகள் ரேப் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வு சொல்கிறது.
                  2020 ல் "வல்லரசாகப்போகும்" இந்தியாவில் பாதி சனத்தொகைக்கு சரியான கழிப்பறை வசதியே இல்லை.பெண்கள் வயல்வெளிகள் அல்லது வேறு மறைவிடங்களில் ஒதுங்கும்போது பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறார்கள்.சமீபத்தில் உ.பியின் படுவான் என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்ற அக்காள் தங்கை இருவரும் காணாமல் போக பிறகு விசாரணைக்கு பிறகு அவர்கள் ரேப் செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதில் கொடுமை என்னவெனில் அந்த இரண்டு உடல்களும் முறையான பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே கங்கை நதிக்கரையில் புதைத்து "அடையாளத்துக்கு" ரெண்டு முள்ளு செடியைநட்டு வைத்திருந்தார்கள்.பிறகு அங்கே வெள்ளம் வந்து அனைத்தும் அடித்து செல்லப்பட்டுவிட்டது.பிரேத பரிசோதனை முறையாக செய்யப்படவுமில்லை.அந்த உடல்களும் வெள்ளத்தில் சென்றுவிட்டதால் எந்த மைனர் குஞ்சு(கள்)இதை செய்தனவோ அவை அடுத்த ரேப்பை அட்வான்ஸ் புக்கிங்கில் செய்ய தயங்காது என்பதை சொல்லத்தேவையில்லை.இதைப்பற்றி காவலர்ஸ் என்ன சொல்ல போறேள்?கழிப்பறை இல்லாதது அந்த பெண்களின் குற்றமா?இல்லை பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பது குற்றமா?
                  மேலும் இந்த பேருந்துகளின் "இடி" மன்னர்களுக்கு எந்த உடையும் ஒன்றுதான்.
              அப்போ உடையும் காரணமில்லை.இளம்பெண் என்பதும் காரணம் இல்லை.பிறகு என்னதான் காரணம்?ஆண்களின் மனோபாவம்.அவர்கள் வளர்க்கப்படும் விதம்.
           சிறு வயதில் இருந்தே பெண்கள் என்றாலே அவள் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆணுக்கு சொந்தமாகப்போகும் பண்டம் என்றே ஆண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கபபடுகிறது.இந்த ஆண் குழந்தை, இளைஞன் ஆனதும் ஒரு பெண்ணை பார்க்கிறான்.இவனுக்கு பிடித்திருக்கிறது.உடனே அவள் தனக்கு மட்டுமே சொந்தமான பண்டம் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது.இவன் அவளிடம் போய் இதை சொல்கிறான்.அவள் மறுக்கிறாள்..உடனே "எனக்கு கிடைக்காத இந்த பண்டம் யாருக்கும் கிடைக்கூடாது" என்று அமிலத்தை வீசுகிறான்.
                    இந்த காவலர்ஸ் அமில வீச்சுக்களை தடுக்க என்ன வழி சொல்ல போறேள்?பெண்கள் இரும்பு கவச உடையணிந்து சென்றால் அமில வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று ஐடியா வந்தாலும் வரும்.
                         சினிமாவும் இதே எண்ணத்தைதான் ஆண்களின்(குறிப்பாக இளைஞர்கள்) மனதில் பதிய வைக்கிறது.சில உதாரணங்கள்:
 -யூத் படத்தில் டாக்குடர் நாயகியிடம் லவ்வை சொல்ல அவள் ஐ டோன்ட் லவ் யூ என்பார்.."எனக்கு அதபத்தி கவலை இல்ல" என்று மகா புத்திசாலித்தனமாக பதில் அளிப்பார் டாக்குடர்.
-எட்டு  வயது சிறுவன்  மனதளவில்   28 வயது இளைஞன் ஆகிவிட (மனதளவில் எட்டு வயதுதான்)அவனுக்கு நாயகி சக்கர இனிக்கிற சக்கர என்று "வகுப்பெடுக்கும்" மகோன்னத காட்சி ந்யூவில்.
- காயம்பட்ட சிம்புவுக்கு ரத்தம் கொடுத்த நாயகியை பார்த்த உடனேயே லவ்வை சொல்லி அவள் மறுத்தாலும் தொடர்ந்து அவளை மிரட்டி பணிய வைத்து திருமணம் செய்யும் காவிய காட்சி தம் படத்தில்.
-எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற தத்துவத்தை பதிய வைத்தது பிரியமுடன்.
-தம்பி பொண்டாட்டியை அடைய அண்ணன் செய்யும் சேட்டைகள் வாலி.

              இதை தவிர்த்து  இசையுலகில் இருந்து எவ்வளவு மகத்தான பாடல்கள் வந்துள்ளன?
-வேணாம் மச்சா வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
-ஆணோட காதல் கைரேக போல பெண்ணோட காதல் கைக்குட்ட போல
-இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சிபோச்சுடா
-அடிடா அவள ஒதடா அவள வெட்றா அவள...
         இந்த கருமாந்திர லிஸ்டை இனியும் தொடர விருப்பமில்லை.இப்படியாகத்தான் இருக்குது சமூக நிலைமை.ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த விஷயத்தையும் விமர்சிக்காத காவலர்ஸ் பெண்கள் உடை மட்டும் கண்ணை உறுத்துது என்றால் நல்ல கண் டாக்டரை அணுகவும்.