Sunday 27 November 2011

ஏன் இந்த கொலைவெறி ?(ஞாநி கட்டுரை)

ஞாநி  அவர்களுக்கு நன்றியுடன்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கில செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி ?
கம்ர்ஷியல் சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். அறுபதுகளில் ஒரு முறை ஒரு நடிகர் தான் நடிக்கும் பாத்திரத்துக்காகத் தொடர்ந்து தலையை மொட்டையடித்துக் கொள்வதாக செய்தி வெளியானபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்போது அவருக்கிருந்த அவருக்கே உரிய நையாண்டியில் கேட்டார் : அந்த நடிகர் ஒரு இஸ்லாமியர் வேடத்தில் நடித்தாரே, அதற்காக முறைப்படி சுன்னத் செய்துகொண்டாரா ?! சினிமாகாரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்தபட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணா சாலையில் நடந்து போகிற காட்சியை படம் பிடித்ததைக் கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி ‘ என்று பரபரப்பாக்குவார்கள்.
அந்த வரிசையில் படத்துக்கான முன்னோட்ட பப்ளிசிடியாகத்தான் ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாட்டு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்புள்ள எதையும் செய்தியாக்கி விற்பனை செய்வதில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் கொலைவெறிக்கு இது சரியான தீனி. படத்தின் டைரக்டர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. நாயகன் மருமகன் தனுஷ். ஜோடி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. சிறந்த நடிகர் விருது வாங்கிவிட்ட தனுஷ் அடுத்து சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஆங்கிலப் பாடலாசிரியர் . தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கில பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக்கூடும்.
கொலை வெறிபாட்டு ஏன் ஹிட்டானது ? அதில் அப்படி என்னதான் இருக்கிறது ?
இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்’ என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். , அருண், அகல்யா, ஷோபா, லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும் !
இந்த மாதிரி நவீன டெக்னாலஜி சார்ந்த வணிக சாமர்த்தியங்களை தமிழ் வணிக சினிமா அடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. அதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.
கொலைவெறி பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டடதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப்படத்தில் இருக்கும் ஆங்கிலப்பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாட்டு கேட்கும் இளம் மனங்களில் இடம் பிடிக்க அடிப்படைக் காரணம் கால்தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப்பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது.
பாடலின் விஷயம்தான் நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. கல்யாணப்பரிசு காலத்திலிருந்து சினிமாவில் இருக்கும் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்’ தீம்தான். ஆனால் அறுபது வருட முந்தைய தமிழ்க் காளைக்கும் இன்று தனுஷ் மூலம் சித்திரிக்கப்படும் தமிழ்க் காளைக்கும் கடுமையான வேறுபாடு இருக்கிறது.
இன்று தனுஷ் காட்டும் இளைஞன் விடலையாக, பொறுக்கியாக, ஒரு சமூகப் புல்லுருவியாக இருக்கிறான்.ஆடுகளம் படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரம் அவன் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு மனிதன் பற்றியது. விதவைத்தாய் வறுமையில் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவள் பேசினாலே, “ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு” என்று விடலை மொழியில் வாயை மூடச் சொல்லுகிறான். தொடர்ந்து பேசும் தாயிடம் வாயை மூடாவிட்டால், ‘கொன்னே போடுவேன்’ என்று கர்ஜிக்கிறான். செவத்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் துரத்தித்துரத்தி மிரட்டி மிரட்டிக் காதலிக்க வைக்கிறான்.முப்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்த படத்தின் சேவல் சண்டை பண்பாட்டு அடையாளம். தனுஷ் என்ற கதாநாயகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 14 முதல் 20 வரையிலான எண்ணற்ற இளைஞர்களுக்கு பொறுக்கித்தனமும் பெண் சீண்டலும்தான் படத்தின் செய்தி.
குடும்பப் படமாக, அதாவது குடும்பத்தோடு சென்று கண்டு களிக்க ஏற்றவையாக சென்ற வருடம் பாராட்டப்பட்ட இன்னொரு படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்தப்படத்தின் நாயகப்பாத்திரம் இன்னொரு பொறுக்கி. துபாயிலிருந்து அப்பா அனுப்பும் பணத்தை அம்மாவிடமிருந்து ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சைக்கிளைத் தடுத்துப் பிடித்துத் தன்னைக் காதலிக்கும்படி மிரட்டுபவன். இந்தப் படமும் விமலுக்கு பதில் தனுஷ் நடித்திருக்கக்கூடிய ஒரு படம்தான்.
இரு படங்களிலும் பொறுக்கி கதாநாயகர்களால் காதலிக்கும்படி மிரட்டப்பட்ட நாயகிகள் அடுத்த கட்டத்தில் தாமே மனமுவந்து காதலிக்கிறார்கள்.இதுதான் விடலை மனங்களுக்குக் களிப்பூட்டும் செய்தி.
இந்த வரிசையில்தான் ‘கொலைவெறி’பாடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. செவத்த பெண் ஏமாற்றிவிட்டாள். கறுத்த பையன் புலம்புகிறான். வெள்ளை நிலா கறுப்பு வானத்தில் இருப்பது போல நாம் இருக்க முடியாதா என்று ஏங்குகிறான்.
தன் காதலை ஏற்காதவளைக் கொலை வெறி பிடித்தவள் என்று வர்ணிக்கிறான்.
கொலை வெறி பாடல் வந்திருக்கும் அதே சமயத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு தனுஷ் பாடிய பாடல் என் காதல் அது கண்ணீருல.. இதில் பிரபலமான வரிகள் : அடிடா அவளை உதைடா அவளை என்பவைதான். எதற்கு அடிக்கவேண்டும்? உதைக்க வேண்டும்? இவனைக் காதலிக்க அவள் மறுத்துவிட்டதற்குத்தான். விடலை மனங்களுக்கு இன்னொரு செய்தி. உனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கவேண்டாம். அவள் எதற்கு இருக்க வேண்டும்? அடி உதை கொல்லு… தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவது தொடர்ந்து நடக்கும் கொடுமையான வன்முறை.
இரு பாடல்களிலும் குடிப்பதும் போதையும் இந்த சோகத்துக்கு மருந்தாக ஆறுதலாக சொல்லப்படுகிறது. இருபதாயிரம் கோடி ரூபாய் விற்பனையை நோக்கி தமிழக அரசின் மது வியாபாரம் படுவேகமாக ‘வளர்ந்து’ கொண்டிருக்கும் நிலையில், ப்ளஸ் டூவிலேயே போதை அடிமைகள் உருவாகிக் கொண்டிருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயக பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதை செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இன்றைய தமிழ் சமூகத்தில் வளரிளம்பருவத்தில் இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு பதில் கொலைவெறியோடு அதிகரிப்பதையே கொலைவெறி பாடல் கலாசாரம் செய்கிறது. ஆண்-பெண் உறவு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதே விடலைப்பருவத்தில் புரியாத சிக்கலாக பலருக்கு இருக்கிறது. செவத்த பெண்ணுக்காக ஏங்கும் கறுத்த பையன் என்ற பிம்பம் இருவருக்கும் ஆபத்தானது. செவப்பும் கறுப்பும் உடல் நிறமும் பிரதான விஷயங்களே அல்ல. மன்ம்தான் முக்கியம், அறிவுதன முக்கியம். அன்புதான் முக்கியம் என்ற பார்வைக்கு பதில் உடல் சார்ந்து மட்டுமே இவை இளம் மனதைத் தூண்டுகின்றன.நம் சமூகத்தின் நிறவெறியின் இன்னொரு வடிவமே கொலை வெறி பாட்டு.
இப்படிப்பட்ட பாடல்கள் ஹிட் ஆவது பற்றி வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம். எதிர்காலத் தமிழகம் பற்றி சிந்திக்கும் ஒருவரும் மகிழ்ச்சியடையமுடியாது. பொறுக்கியாக நடிக்கும் தனுஷோ,நடிக்கவைக்கும் ஐஸ்வர்யா, வெற்றிமாறன்களோ தங்கள் அன்றாட நிஜ வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும், உடையவர்களாக வாழ்வதினால்தான் அவர்களால் ‘தொழிலை’ ஒழுங்காகச் செய்யமுடிகிறது. ஆனால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்கள் தமிழகத்தின் பள்ளிகளிலும், தெருக்களிலும் ஏராளமான இளம் மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலைக்கழிப்பிலிருந்து வழிநடத்த நம்மிடம் முறையான கவுன்சிலிங் அமைப்புகள் எதுவும் இல்லை. வழி காட்டக்கூடிய ஊடகங்களே அவர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். நாய் விற்ற காசு குரைக்காது என்பதுதான் அரசு முதல் படைப்பாளிகள் வரை தாரக மந்திரமாகிவிட்டது.
****நன்றி:ஞாநி  

17 comments:

Unknown said...

//தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கில பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக்கூடும். //

ராண்டார் கையின் - இடது கையை பிடிக்க முடியும்ன்னு நகைசுவையா சொல்லுங்க ஞானி சார் !

Ramesh said...

என் பாக்கெட் ரொம்பி போச்சா அது போதும் - இவனுங்களுக்கு வேற என்ன யோசனை வர போகுது? கொல வெறி தான் வரும் - நீங்க சொன்ன மாதிரி இதை பார்க்கும் மாணவ சமுதாயமும் ரௌடி கூட்டமாய் மாறும் நாள் தொலைவில் இல்லை - வேறொரு செய்தி - குடும்ப சம்பந்தமான கொலைகளில் தமிழ்நாடு முதலிடம் - நல்லா நடத்துங்க

Mathan said...

சினிமா ல என்ன சொன்னாலும் அதை அப்படியே செஞ்சுருவோமா? எங்களுக்கு சுய புத்தி இல்லையா? நானும் இந்த மாதிரி படம் பார்த்துதான் வளந்தேன், நான் சொந்தமா தொழில் பண்றேன், எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கு.. நல்லாருக்கேன், என் பெற்றோர்கள் நல்லருகாங்க... சினிமா அவங்க தொழில், அதை நீங்க ஏன் சீரியஸ் ஆ எடுதுகறீங்க?... ரமேஷ் நீங்க சொல்றது எனக்கு சிரிப்பு தான் வருது.. நம்ம வேலைய நம்ம பாப்போம் ரமேஷ், சினிமா வ தவிர தெரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்கு, இதெல்லாம் விடுங்க....

Vadakkupatti Raamsami said...

நான் சொந்தமா தொழில் பண்றேன், எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கு.. ///
.
.
நீங்க ஒரு மெச்சூர்ட் குடும்பஸ்தர்!அதனால் நீங்க இதை சினிமாவா மட்டும் பார்ப்பீங்க!ஆனா விடலை பசங்க டீனேஜ் பசங்க என்ன செயுரானுங்க?ஏற்கெனவே பத்தாப்பு படிக்கிரவனே டாஸ்மாக் சரக்கடிக்கிறான்!என்ன காரணம்?எல்லா சினிமாவிலும் காமெடி காட்சிகள் டாஸ்மாக்கில் தான் எடுக்கப்படுகிறது!சினிமாவை சினிமாவா பார்ப்பவர்களை பற்றி அவர் சொல்லவில்லை!விடலை பசங்க பற்றிதான் அவர் சொல்றார்!அவர்கள்தான் தனுசின் பெரும்பாலான ஏன் எல்லா நடிகர்களின் பெரும்பாலான ரசிக விழுக்காட்டில் இருப்பவர்கள்!அவர்கள்தான் பீர் அபிஷேகம் செய்பவர்கள்!சினிமாவை சினிமாவாக பார்ப்பவர்கள் நடிகருக்கு பீர் பால் அபிஷேகம் செய்வார்களா?சூடம் கொளுத்துவாங்களா?

Sathesh-Prabu said...

ஞானி kku ithe velai than.... oruthan apdadi sonna nama ippadi sona than namala naalu peru papan nu...

ananthu said...

ஞானியின் சமூக அக்கறைக்கு நன்றி ... சினிமாவை பாத்து கெட்டு போறாங்களா இல்ல சமூகத்தில் நடக்கறத தான் அவங்க எடுக்குறாங்களா ? என்பது நீண்ட நாள் விவாதம் ... இது போன்ற பப்ளிசிட்டி அவர்களின் உக்தி ... " மயக்கம் என்ன " கூட ஞானி சொல்வது போல கலாசார சீரழிவு படம் தான் ... பிடிச்ச பாக்கலாம் இல்லேனா விட்டுடலாம் .. அவ்வளவு தான் ..! மயக்கம் என்ன - அரை மயக்கம் ...முடிந்தால் படத்தின் விமர்சனத்தை படிக்கவும் http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html

Vadakkupatti Raamsami said...

oruthan apdadi sonna nama ippadi sona than namala naalu peru papan nu... //
.
.
தனுசுக்கும் அதே வேலைதானே?எல்லோரும் ராகமாக பாட்டை கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் அபஸ்வரமாக நாராசமாக பாட்டு கொடுப்பது எதுக்கு?பப்ளிசிட்டிக்குதானே?இல்லைன்னு அவனை சொல்ல சொல்லு!

Vadakkupatti Raamsami said...

ஞாநி சொன்ன கருத்துக்கு மறு கருத்து சொல்ல முடியாதவர்கள் அவரை தாக்குவது இயல்புதான்!
**************************************************
@ananthu
விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார்//
.
.
நல்ல வேலை அந்த கொடுமையெல்லாம் நான் பாக்கலை.முன்னமே சொல்லி எச்சரித்ததுக்கு நன்றி!

Vadakkupatti Raamsami said...

கொலவெறி பாடல் வெறும் தொடக்கம்தான்.அதே போல இப்போ அதிக ஹிட்ஸ் வாங்கிய ஒரு பாடல் கிளப்புல மப்புடா என்கிற தத்துவ(??!!) பாடல்.இனி இது போன்ற நாராசங்கள் தொடரும்!அதை தொடக்கி வைத்தவர் தனுஸ் என்பதையும் மறுக்க இயலாது

Siva Karur said...

Hmmm.. nalla dhaan solleerukkeenga!! makkal manadhil yerinaal paravaayillai.. paavam!!!

Unknown said...

nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com

R.Puratchimani said...

//எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயக பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதை செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். // super.....thanks for sharing this...

N.H. Narasimma Prasad said...

எனக்குத் தெரிந்து இன்றைய விடலைப் பருவத்தினர் சினிமாவை பார்த்து கெட்டுப்போவதாக தெரியவில்லை. அப்படி கெட்டுப் போனாலும் சினிமா தான் பெரும் காரணம் என்று சொல்ல முடியாது. பெற்றோரின் வளர்ப்பு, சமுகத்தின் வளர்ப்பில் தான் அவன் வளர்கிறான். இன்றைக்கு இளம் தலைமுறையினர் சினிமாவை சினிமாவாகவே பார்க்கிறார்கள் என்பதே என் கருத்து.

Vetirmagal said...

Cinema had always pandered to the youth and women viewers, to get box office success. Those who saw it only as an entertainment were saved from disaster, and those who saw it as a life and replicated it fell on the wayside. But neither Danush nor his seniors do not worry about that, their wealth and popularity is their life, why should they care?

Admin said...

சமூக அக்கறை உள்ள படங்கள் வந்தால் பெண்களும் முகம் சுழிக்காமல் பார்க்கலாம்.பாடல்களின் வரிகள் பெண்களும் பாடும் படியாக இருந்தால் தான் ஒரு பாடல் வெற்றி பெற்றதாக அடையாளம்.......)

Vadakkupatti Raamsami said...

இன்றைக்கு இளம் தலைமுறையினர் சினிமாவை சினிமாவாகவே பார்க்கிறார்கள் என்பதே என் கருத்து. ///
.
.
இதற்கு நான் மேலே உள்ள கம்ண்டில் விளக்கம் கொடுத்துள்ளேன்!
***********************************************
Vetrimagal & Divya jax
சரியாக சொன்னீங்க

சாமக்கோடங்கி said...

லட்சியம், கொள்கை இல்லாதவர்களின் வாழ்க்கையில் கேளிக்கைகள் அதிகமாகி எதில் திடீரென அதிக சுகம் கிடைகிறதோ அதை நோக்கி ஓடி விடுவர். அறுபது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு இந்தக் கேளிக்கைகளுக்கோ கண்டபடி ஆட்டம் போடுவதற்கோ நேரம் கிடைக்காததற்குக் காரணம் சுதந்திரப் போராட்டம். அது கிடைத்ததனால், ஒரு அமைதியான வாழ்க்கை இப்போது அமைந்துள்ளது. அதை முதலில் அனுபவித்த மக்கள் அதில் ஊரித்திளைத்து,இப்பது கேளிக்கைகளுக்கு ஆளாகி உள்ளோம்.. அதுதான் பிரச்சினை, அதைப் புரிந்து கொண்டவர்களின் வியாபாரத் தந்திரம் தான் இந்தப் படம். ஒரு மனிதனின் உள்ளேயே கொடிய மிருகமும் உள்ளது, நல்ல எண்ணங்களும் உள்ளது.. அந்தக் கொடிய மிருகத்தை வெளியே கொண்டுவரும் வரும் பணியை, "நாங்கள் வெளிப்படையாக வாழ்கிறோம், வெளிப்படையாக எதையும் சொல்கிறோம்" என்று இன்றைய இளைஞர் கூட்டம் சொல்லிக் கொண்டு திரிய, அதையே இன்றைய சினிமா உலகம் வியாபாரத்திற்கு உபயோகப் படுத்துகிறது. நாளைக்கே, நண்பனின் மனைவியைக் குழந்தைகளோடு அபகரிக்கும் ஹீரோவாக தனுஷ் நடித்தாலும், உச்சுக் கொட்டிப் பார்ப்பார்களே தவிர, அதிலுள்ள கலாச்சாரச் சீரழிவை உணரப் போவது இல்லை. ஏனெனில், பழையவர்களின், வெறியும், நெறியும் இப்போது இல்லை.. நாம் அனைவரும் நடைபிணங்கள்.. உப்புச் சப்பில்லாத வாழ்க்கை நம்முடையது.. சின்ன சின்ன விஷயங்களுக்கு முகபுத்தகத்தில் சண்டை போட்டுக் கொண்டு வீரத்தைக் காட்டுபவர்கள் தான் நாம். கூரிய வாளை நேரில் சந்தித்தாலே ஒண்ணுக்குப் போய் விடுவோம்.. வாழ்க சினிமா, வளர்க இளைய சமுதாயம்..

Post a Comment