Sunday 20 November 2016

Crimes and misdemeanors(1989)

                  சமூகத்தில் குற்றம்  இழைப்பவர்கள் அது  எத்தகைய  குற்றமாக  இருந்தாலும் சரி.அந்தந்த  குற்றத்தின்  தீவிரத்திற்கு  தகுந்தாற்போல தண்டனை  வழங்கப்படும்.ஒவ்வொரு  நாட்டிற்கும்  தண்டனைகள்  சட்டதிட்டங்கள்  மாறலாம்.ஆனால்  தண்டனை என்பது உண்டு.
               ஆனால்  இந்த  தண்டனை என்பது உண்மையில் குற்றவாளியை சீராக்கவா இல்லை  பெயரளவு  தண்டனையா  என்பது  விவாதத்திற்குரியது. அந்த  குற்றவாளி  அதை  தண்டனையாக  பார்க்கும்வரையே  இந்த  தண்டனை முறைகளுக்கு வெற்றி எனக்கூறலாம்.பல  நேரங்களில் குற்றவாளி தனக்களிக்கப்பட்ட  தண்டனையையே ஜாலியாக எதார்த்தமாக எடுத்துக்கொண்டால் அந்த  தண்டிக்கும் முறையே கேள்விக்குள்ளாக்கப்படும்.
             மேலும் சட்ட ரீதியான  தண்டனையில் இருந்து தப்பித்த  பலரும்  மனசாட்சி உறுத்தாமல் ஜாலியாக  எவ்வித  மனபாரமும் இன்றி வாழ்வதையும்  காண்கிறோம்!
               யூதா ரோஸந்தால் என்ற  பிரபல  கண் மருத்துவர் மனைவிக்கு  தெரியாமல் ஒரு  விமான  பணிப்பெண்ணோடு(டொலோரஸ்) இரு வருடங்களாக  உறவில் உள்ளார் .ஒருகட்டத்தில்  டொலோரஸ்  இந்த  விஷயத்தை யூதாவின்  மனைவி  மிரியத்திடம் சொல்லிவிடுவேன்  என  மிரட்டுகிறாள்.
யூதா 

            யூதாவை  பொறுத்தளவில்  சிறுவயதில்  தீவிர  மத(யூதம்)  நம்பிக்கை உள்ளவராக  மத  சடங்குகளை  தீவிரமாக  பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டவர்.ஹீப்ரூவில் இறைவணக்கம்  செய்யும்  ஒரு  குடும்பமது.
             ஆனால் பெரியவனாக  வளர்ந்தபின்   ஒருகட்டத்தில் இறைநம்பிக்கையை இழக்கிறார்.முழுமையாக  அல்ல.அந்த  கங்கு உள்ளே மிகச்சிறியதாக  இருந்தாலும்  உயிர்ப்புடனேயே  இருக்கிறது.அதனால்தான்  தான்  சிறுவயதில்  வளர்ந்த  வீட்டினை அதன் முதலாளி  அனுமதியோடு  மீண்டும்  சுற்றிப்பார்க்கும்போது  அந்த  இறைநம்பிக்கை மீண்டும் விஸ்வரூபம்  எடுக்கிறது.அவரது  தந்தை  அடக்கடி  சொல்லும் "The eyes of God are on us always." என்ற  வாசகம்  மீண்டும் நினைவுக்கு வருகிறது!
யூதாவின் தந்தை 

                 டொலோரஸ் மிரியத்திடம்  உண்மையை  சொல்ல  அனுமதிக்கக்கூடாது  என்பதே  யூதாவின்  எண்ணம்.காரணம்  என்ன?
        -   மிரியம்  அதை  தாங்கிக்கொள்ள மாட்டாள்;-மிரியத்தை  டைவர்ஸ்  செய்துவிட்டு டொலோரசை மணக்க தன்னால்  முடியாது;-  மிரியத்துடனான  ரகசிய  உறவைப்பற்றி  மனைவியிடம் ஒப்புக்கொள்ளவும்  தைரியமில்லை!
            இதெல்லாம்  காரணமாக  யூதா  சொன்னாலும் அதைவிட  முக்கியமாக  அவன் நினைப்பது  அவனது  இமேஜை.சமூகத்தில்  அவனுக்கிருக்கும்  அந்த  மரியாதையில்  சிறுகீறல்  விழுவதையும்  அவன் அனுமதிக்க தயாரில்லை.
           மிரியத்தை ஆள்வைத்து கொன்றுவிடுகிறான் யூதா.அதன்பிறகு மூன்று  மாதங்கள் கடுமையான  குற்ற  உணர்வும்  மன உளைச்சலுமாக நகர்கிறது.Rabbi யாக  இருக்கும்  தனது  நோயாளிகளில்  ஒருவரான  Ben னிடம்  இதைப்பற்றி  மேம்போக்காக  விவாதிக்கிறான்.
          மூன்று  மாதங்கள்  கழிகிறது.அதன்பின்  அவனே  ஆச்சரியப்படும்  வகையில்  மிரியத்தை  கொன்ற   அந்த  குற்றஉணர்ச்சி  முற்றிலும் விலகிவிட்டதாக சொல்கிறான்.
          இங்கேதான்  வுடி ஆலனின் திறன்  வெளிப்படுகிறது.
"கடவுளின்  கண்கள்  தொடர்ந்து எனது  செயல்களை  கவனிக்கிறதுதானே?அப்போ  நான்  செய்த  கொலையையும் அவர்  கவனித்திருப்பார்தானே?இந்த  மூன்று  மாதங்களில் அதற்கான  தண்டனை  எதுவும் எனக்கு  கிடைக்கவில்லையே!அப்போது  கடவுள் இதையெல்லாம்  பார்த்தாலும்  பெரிதாக  எடுத்துக்கொள்வதில்லை என்றுதானே  அர்த்தம் !" என்கிறான்.

        இங்கே  மற்றொரு  காட்சியைப்பற்றியும்  சொல்லவேண்டும்.யூதா  தான்  சிறுவயதில்  வாழ்ந்த  வீட்டிற்கு  மீண்டும் செல்கிறான்.அங்கே டைனிங்  டேபிளில் அவன்,அவன்  சகோதரன்,தாய்  தந்தை  அத்தை எல்லாரும்  உள்ளார்கள்.அங்கே  ஒரு  விவாதம்.
          தீவிர  யூத நம்பிக்கையாளரான யூதாவின்  தந்தை "கடவுள்  எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டிருக்கிறார்"  என்றுசொல்ல  அவரது  சகோதரி "ஆறு  மில்லியன்  யூதர்கள் நாஜிக்களால்  கொன்றொழிக்கப்பட்டார்கள்!அதையும்  கடவுள்  பார்த்துக்கொண்டுதானிருந்தார்"  என்றுசொல்ல "நீ  ஒரு cynic,nihilist.நீ  ரஷ்யாவில்  இருக்கவேண்டியவள்"  என்கிறார்  யூதாவின்  தந்தை 
 Do you not find human impulse is basically decent? என்ற கேள்விக்கு 
        It's basically nothing  என்கிறாள்  யூதாவின்  அத்தை.
                 "குற்றமிழைக்கும் ஒருவன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடிந்தால்,தார்மீக நெறிமுறைகளை பொருட்படுத்தாதவனாயிருந்தால் அவன்  சுதந்திர மனிதன்தான்" என்கிறாள் அவள் .


            இங்கே  மற்றுமொரு  ட்ராக்-  வுடி  ஆலன்  வரும்பகுதி.யூதாவின் செக்மண்டைப்போல  ரொம்ப   இருண்மையாக  அல்லாமல்  கொஞ்சம்  ஜாலியாக  இருந்தாலும்  அதுவும்  முடிவில் கிளிப் ஸ்டேர்ன்(வுடி) perennial சுமையோடு எழுந்து  செல்வதாக காட்டப்பட்டுள்ளது.
க்ளிப்

       வெறுமனே உயர்ந்த  கனவுகள் மட்டும்  ஒருவனை  உயர்த்தாது  என கிளிப்  விமர்சிக்கப்படுகிறார்.தரமான டாக்குமெண்டரி எடுப்பதே  அவர்  லட்சியம்(அந்த  ப்ரொபசர் வரும்  காட்சிகள்  அற்புதம்).அதனாலேயே  கையில்  பைசா  காசில்லை!சகலை  லெஸ்டர் தன்னைப்பற்றி  ஒரு டாக்குமெண்டரி எடுக்க கிளிப்பை நியமிக்கிறான்.ரொம்ப மேம்போக்கான  மொண்ணையான ஜிகினா ஆசாமி  லெஸ்டர்.லெஸ்டர் மேலுள்ள  கடுப்பில் கிளிப்  அந்தக்குறும்படத்தை காமெடியாக  எடிட்  செய்துவிடுகிறார்(இதான்  ஜிகிர்தண்டா  என  தனிப்படமாக  வந்தது!!) கிளிப்பை வெளியே  துரத்துகிறான் லெஸ்டர்.

           கிளிப் லெஸ்டரிடம்  பணியாற்றும்  ஹேலியை  விரும்புகிறார்.அவளும்  இவரை  விரும்புகிறாள்.மனைவியை விவாகரத்து  செய்து  ஹெலியை  மணமுடிக்க நினைக்கிறான்.ஆனால்  லெஸ்டர்  ஹேலியின்  மனத்தை  கவர்கிறான்.
             விடிய  விடிய  மலர்  கொடுத்து  ஹேலியை கவர்ந்ததாக  லெஸ்டர்  பெருமையடிக்கிறான்.இதை  காண  சகிக்காமல்(Remember great depth and smoldering sensuality  does not always win)  கிளிப் தனியே  அமர்ந்திருக்கும்போதுதான்  யூதாவுடனான  உரையாடல் நிகழ்கிறது.அது படத்தின் மிக முக்கிய காட்சி.
காலம்  செல்லச்செல்ல எந்த  ஒரு  நெருக்கடியும் கடந்துவிடும்  என்கிறான் யூதா.ஆனால்  அதற்குபதில் நாம்  செய்த  குற்றங்களும்,சில்லறை தவறுகளும் உண்டாக்கும் பாரத்தை காலம்  முழுக்க  சுமக்கவேண்டியிருக்கும் என  நினைக்கிறான் கிளிப்! 


படத்தின் ஒளிப்பதிவாளர் பெர்மானின் ஆஸ்தான  ஒளிப்பதிவாளரான
Sven Nykvist
 படத்தின்  இருண்மையை பார்ப்பவர்களுக்கும் உணர்த்திவிடும்  அற்புதமான  ஒளிப்பதிவு!

No comments:

Post a Comment