Saturday 7 October 2017

விமலகாசனுடன் ஒரு எக்ஸ்க்ளூசிவ் சந்திப்பு

                         விமலகாசனை  தொடர்புகொண்டு நேர்காணலுக்காக கேட்டபோது சம்மதித்தார்."நீங்க இங்க வரீங்களா?இல்லை நாங்க அங்க வரணுமா?" ன்னு கேட்டதுக்கு "அங்கெல்லாம் வரமுடியாது.இஷ்டமிருந்தா நீ இங்க வா" என்று பன்ச் பேசினார்.

       பேயாழார்வார்பேட்டையில் அவரது அலுவலகத்தினுள் நுழைகிறோம்.பத்து வயது சிறுவன் துவங்கி நூறு வயது கிழவி வரை அங்கெ நடமாடிக்கொண்டிருக்க யார் விமலகாசன் என்று தெரியாமல் "நீ விமலா?" என்று ஒவ்வொருவராக கேட்க   அறையின் மூலையில் இருந்த ஸ்பீக்கர் கரகரத்து "மிஸ்டழ் உதயா...ஐயம் ஷ்யூழ் யூ ஆழ் அவேழ் ஆப் தி ஸ்டேட் ஆப் தி ஆழ்ட் ஆப் தி எக்ஸ்ப்ளோசிவ்ஸ்.சி ஃபோரும்பாங்க."

உதயா: ண்ணா நமக்கு தமிழே தகராறு.நீங்க இன்குலீஸ்ல திட்டுனா எப்படி?எங்க இருக்கீங்கன்னு புரிஞ்சி போச்சு.நாங்களே வரோம்னு மொட்டை மாடிக்கு சென்றோம்.டேபிள்-கணினி-காய்கறி கூடை-கிஸ்மிஸ் பழம்.
விமலகாசன்: குப்பனோ சுப்பனோ இந்த சி ஃபோரை வக்க முடியுமா  மிஸ்டழ் உதயா?
உதயா:  அவனுக்கு வக்க தெரிஞ்சிருந்தா மொதல்ல உங்க சீட்டுக்கு கீழத்தான் வச்சிருப்பான்.ண்ணா சாமானிய குப்பன் சுப்பனுக்கு சி ஃபோர் வக்க தெரியாதுதான்.ஆனா நீங்க காமன் மேனுன்னு சொல்லிட்டு குண்டு வக்குறீங்க.இது முரணா தெரியலியா?
விகா: வெல்...முரண்பாட்டு மூட்டைதானே வாழ்க்கை.
உதயா: வடுகபட்டி பாட்டி மாதிரி பேசாதீங்க.சரி.இப்ப அரசியலுக்கு வருவோம்.
விகா: நா பத்து வயசுலையே அரசியலுக்கு வந்தாச்சுன்னு திரும்பத்திரும்ப சொல்லிட்டே இருக்கேன் .அரசியலுக்கு வருவோம்னு திரும்பவும் கேக்குறீங்க.
உதயா: ண்ணா அது அரசியல் டாபிக்குக்கு வாரத பத்தி சொன்னேனுங்க.
விகா: எந்த டாபிக்னாலும் ஓகே!
உதயா: உங்க மேல வைக்கப்படும் முக்கிய குற்றசாட்டு நீங்க மத்திய அரசை விமர்சிக்குரதில்ல என்பதே.இதுக்கு உங்க பதில்
விகா: வெல் ஆ....நான் இடதும் இல்லை வலதும் இல்லை.இன்னும் அழுத்தி கேட்டால் இடம் சாய்ந்த வலம் என்று கொள்ளலாம்.மொத்தத்தில் நான் மத்தியில் இருப்பவன்.ஏற்கெனவே மத்தியில் மத்திய அரசாக இருக்கும் ஒரு அரசை நான் விமர்சிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.ஒருவேளை அது இட அரசென்றோ வல அரசென்றோ குடை சாய்ந்தால் அதை கண்டிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்பதைமட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
 உதயா: மைண்டு வாய்ஸ்....ம் சலங்கை கட்டிட்டாரு.இனி இவுரு பேசுறது எதுவும் புரியப்போறதில்ல.
: சரிங்ணா.அது இருக்கட்டும் பண மழிப்பிழப்பு பற்றி என்ன சொன்னீங்கன்னு யாருக்குமே புரியல.அதை கொஞ்சம் விளக்குறீங்களா?
விகா: எதுக்கெடுத்தாலும் புரியல விளங்கல என்று என் மீது குற்றசாட்டு வைப்பது ஒரு பேஷனாகவே மாறிப்போச்சு.
: சரி பண மதிப்பிழப்பு பற்றி..
விகா:  வெல் ....ஜகதல பிரதமர் அதை அறிவிச்சதும் முதல் ஆளாக நான் பாராட்டி ட்வீட் செஞ்சேன்.
: அடுத்து ஒரு மாசத்துக்கு வங்கி வாசல்ல க்யூவுல நின்னீங்களா?
விகா:இல்லையே.அப்படி எந்த சிரமமும் நான் படல.
:மைண்டு வாய்ஸ். ஆமா உங்ககிட்ட நூறு அல்லகைங்க இருக்காங்க.ஆளுக்கொரு பேங்க் வாசல்ல நிப்பாட்டி வச்சா உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கபோவுது?
சரி,முதல்ல ஆதரவு தெரிவிச்சீங்க.அப்புறம் ஏன் பம்மிட்டீங்க?
விகா: பம்முவது என்ற சொல்லை என் மீது வீசப்படும் விஷ அம்பாகவே நான் பார்க்கிறேன்.இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது எமது கடமை.இப்போது இந்த திட்டம் தோற்றுவிட்டதாக சொல்கிறார்கள்.இப்போதும் அது வென்றது தோற்றது என்று பைனரியில் பதில் சொல்ல விருப்பமில்லை.
உதயா: அப்போ ஹெக்சாடெசிமல்ல சொல்லுங்க.
விகா: பொருளாதார வல்லுனர்களை தொடர்ந்து அழைத்து கலந்து பேசி வருகிறேன்.விரைவில் சொல்வேன்.
: அப்பவாச்சும் புரியுறாப்ல சொன்னா சரி.நீட் தேர்வு பற்றி?
விகா: வெல் தேர்வு என்றதும் எனக்கு பாலச்சந்தர் சார் நினைவுக்கு வராரு.மூணாப்பு தேர்வு நேரம்.தேர்வு எழுதுறா மாதிரி உள்ள போயிட்டு அப்படியே பின்பக்க சுவர் வழியா வெளிய குதிச்சா அங்க "டேய்!ராஸ்கல்!"னு ஒரு குரல்.கேபி சார்.அன்று அவர் விரல் பிடித்து....
: ண்ணா கேள்விக்கு சம்மந்தமில்லாம எங்கையோ போயிட்டீங்!
விகா: சம்மந்தமில்லாம இல்ல.கேட்க உங்களுக்கு பொறுமை இல்லைன்னு சொல்லுங்க.
: நீட் பத்தி கேட்டா நீட்டி முழக்குறீங்க.சரி  ஜிஎஸ்டி பற்றி?
விகா: வெல் நா பலமுறை தென் மாவட்டங்களுக்கு அந்த ரோடு வழியாத்தான் ஷூட்டிங் போவேன்.இப்ப காதல் தண்டபாணி முகம் மாதிரி ஆகிட்டாலும் அதுவொரு முக்கிய சாலைதான்
: ண்ணா அது இல்லீங்.இது Goods and services tax
விகா:  டேக்ஸ்ன்னு சொன்னதும் நியாபகத்துக்கு வருது.எனக்கு எட்டு வயசிருக்கும்போதே எமது தந்தை கொடுத்த நாலணா பாக்கெட் மணிக்கே சரியாக டேக்ஸ் கட்டி ரசீது வைத்துக்கொண்டவன்.
:மைண்டு வாய்ஸ் ..ஆமா இவுரு தெரிஞ்சே திசை திருப்புறாரா?இல்லை கேள்வியே புரியாமல் திசை மாறுறாரா? சரி அதை விடுங்க.முடிவெடுத்தால் யாம் முதல்வர்னு ட்வீட் பண்ணீங்க.நாங்க கூட முதல்வன் 2 விளம்பரம்னு நெனச்சோம்.இப்ப இந்தியன் 2.ஏன் அப்படி ட்வீட் பண்ணீங்க?
விகா: வெல் நா மொதல்ல இந்தியன்.அப்புறம்தான் ...வெல்..அதை காலம் சொல்லும்..
: க்கும் நீங்களும் கஜினி மாதிரி ஆரம்பிச்சுட்டீங்க போல.
சரி இன்னொரு முக்கியமான கேள்வி.இயக்குனர் பங்கரை எழுத்தாளர்னு சொல்றீங்க.அதெப்படி?
விகா: வெல், எழுதுபவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களே!எமது நெருங்கிய நண்பர் ஆகாஸம்பட்டு சேஷாச்சலம் கூட இதைத்தான் சொன்னார்.
: ஆகா!என்னவொரு உலகத்தரமான விளக்கம்!
எழுத்தாளர் பங்கர்

விகா: சின்ன வயசுல இப்படித்தான்..
: அண்ணா போதுங்.அடுத்த கேள்வி- சமீப காலங்கள்ல வந்த உங்களோட எல்லா படத்துலயும் நடிப்பு துவங்கி போஸ்டர் ஓட்டுறது, ப்ளாக் டிக்கட் விக்கிறது வரைக்கும் எல்லாத்தையும் டிஆர் மாதிரி நீங்களே பண்றீங்க .இப்ப ஒருவேளை நீங்க கட்சி துவங்கி தேர்தல்ல ஜெயிச்சிட்டா முதல்வர் பதவி துவங்கி கவுன்சிலர் பதவி வரைக்கும் நீங்களே எல்லாத்தையும் வச்சிப்பீங்களா?
விகா: உன்னை கண்டிக்க ஆளில்லாமதான் இப்படி ஆகிட்ட.
                        கண்டிச்சிதான் பாருங்களேன் என்று சொல்லி முடிப்பதற்குள் லேபல் மைக்கை கழட்டி வீசிவிட்டு எழுந்து செல்கிறார்.


No comments:

Post a Comment