Tuesday 29 September 2015

சாம்ராட்(1997)

                                                         ஒரு படம் வெளியாகும்  முன்பே  அதைப்பார்க்கும் ஆவலைத்தூண்டுவதில் போஸ்டரும்  டிரைலரும்  முக  முக்கிய  பங்காற்றும்.
அவ்வகையில்  இப்படத்தின்  டிரைலர்  கூட  அல்ல  டிரைலரில்  வந்த  ஒருநொடி  காட்சிதான்  இதைப்பார்க்கும்  ஆவலைத்தூண்டியது.ராம்கி கண்ணில்  காண்டாக்ட்  லென்ஸ்  மாட்டும் காட்சி.இதேபோன்றதொரு காட்சி  பிறகு  விஜய்ஆண்டனி  நடித்த  நான்  பட  போஸ்டராகவும் காட்சியாகவும்   வந்தது  அனைவருக்கும்  தெரிந்ததே.
             படத்தின்  கதை   தாய்  தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை  பழிவாங்குதல் என்ற  வழக்கமான  ஒன்றுதான் .மோகன்  நடராஜன்தான்  அதற்கு  காரணம்  என்றாலும்  ஹீரோ அவரை  உடனே  கொல்லாமல்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொல்கிறான்.காரணம்  மரணம்தான்  சிறந்த  விடுதலை.அதைவிடவும்  கொடுமையான  தண்டனைகள்  உலகில்  உண்டு.இப்படத்தில்  மோ.ந வின்  இரண்டு  மகள்களை  திருமணம்  செய்துகொண்டு  ஏமாற்றி  அதன்மூலம்  மோ.ந வை  ஒவ்வொரு  நொடியும்  சாகடித்தல்  என்பதே  படம்.
               வில்லனை பழிவாங்க  ஹீரோ  பல்வேறு  கெட்டப்புகள் போடுவது என்பது  இதற்குமுன்பும்  கைதியின்  டைரி,சுகமான  ராகங்கள்   போன்ற  பல படங்களில்  வந்துள்ளது.
                 ஹீரோ  படம்  துவங்கியதில்  இருந்தே  வில்லத்தனம்  செய்துவந்தால்  பிற்பகுதியில்  அவர்  ஏன்  அப்படி  ஆனார்?எதற்காக  இவைகளை  செய்கிறார்  என்று  ஒரு  பிளேஸ்பேக்  கண்டிப்பாக  இருக்கும்.அதுமாதிரியான  விளக்கங்கள்  தேவையில்லை  என்பது  என்  கருத்து.காரணம்  மனிதர்கள் சிடுமூஞ்சிகளாக  சேடிஸ்டுகளாக கொலைகாரனாக நெஞ்சழுத்தம் கொண்டவர்களாக   இருப்பதற்கெல்லாம்  பின்னணி  காரணம்/சம்பவங்கள்  இல்லாமலேயே இயல்பாக  வரக்கூடிய  சமாச்சாரங்கள்தான்.மனித மனத்தின்  இயல்பே  தான்  வாழ  எதையும்  செய்யும்  தன்மை கொண்டதே(இதை  நோலன் இன்டர்ஸ்டெல்லார் மேட்  டேமன்  கதாபாத்திரம்  மூலம்  காட்டியிருப்பார்).பொதுநலப்புடலங்காய்  எல்லாம்   மேடைப்பேச்சுகளுக்கு  வேண்டுமானால்  பயன்படலாம்.ஆனால்  மனித  இயல்பு  அதுவல்ல  என்பதை  நாள்தோறும்  செய்தித்தாள்  வாசித்தாலே  தெரிந்துகொள்ள  முடியும்.
                   முதல்  மகளை  ஏமாற்றிவிட்டு  போனவர்  இரண்டாவது  மகளான  வினிதா(போலீசு)வை  ஏமாற்ற  முடிந்ததா?என்பதே  படம்..தனது  குடும்பம்  அழிந்ததற்கு பழிவாங்க  வேண்டும் ..அதற்காக  எதையும் செய்யத்தயாராக  இருக்கும்  குரூர  குணம்,  இடி,மழை  வந்தால்  வலிப்பு  வந்துவிடும்  இயலாமை, முதல்  மகளை  தான்தான்  ஏமாற்றியது  என்று  தெரிந்துகொண்ட  டாக்டரை  கொன்றுவிட்டு  அவர்  தன் பெயரை  ரத்தத்தால்  தரையில் எழுதிவைத்ததை  தனது  விரலை  அறுத்து  அந்த  ரத்தத்தால்  மறைக்கும்  கில்லாடித்தனம் என்று ராம்கி  கேரக்டருக்கு சரியாக  பொருந்தியிருக்கிறார்.குறிப்பாக  முதல்  மகளை  கண்டுபிடிக்கும்  பொறுப்பில்  இருக்கும் வினிதா  உடனேயே  தைரியமாக  விசாரணை  நடக்கும்  இடங்களுக்கு  செல்லுதல்; இவரின்  ப்ரேஸ்லெட்டை  பிணத்திற்கு  அருகில்  வினிதா  எடுத்தவுடன்  தலையை  ஸ்டைலாக  கோதுவது   போல கையில் ப்ரேஸ்லெட்  இருப்பதை  காட்டுதல் சுவாரஸ்யமான  காட்சி.
                      நிஜ  வாழ்வின்  சம்பவங்களைத்தான்  சினிமாவாக்குகிறோம்  என்று  சினிமாக்காரர்கள்  சொல்ல ,சினிமாவைப்பார்த்துத்தான்  சமூகம்  கெடுகிறது  என்று மக்கள்  சொல்ல  இந்த  விவாதத்திற்கு  முடிவே  இல்லை.இப்படத்திலும் முதல்  மகளுக்கு  தாலி  கட்டும் விடியோவில்  மறைக்கப்பட்ட  முகம்  யாருடையது? என்று  போலீஸ்  விசாரிக்க ராம்கி  அந்த விடியோகிராபரை  கொன்று  பார்ட் பார்ட்டா  அறுத்து  ரோலர் சூட்கேஸில்  எடுத்துக்கொண்டு  செல்லும்  காட்சி  நாவரசு  கொலை  வழக்கு  உச்சத்தில்  இருந்த  நேரத்தில்  அந்த  பாதிப்பில்  எடுத்துள்ளார்கள்.குறிப்பாக  சூட்கேஸை  தள்ளிக்கொண்டு வரும் வேளையில்  எதிரில்  வினிதா  வர  "சும்மா!  புது  சூட்கேஸ்  பர்சேஸ்"  என்று  சிரித்துக்கொண்டே  சொல்லிவிட்டு  செல்லும்  காட்சி சூப்பரு.
                    மற்றபடி  கிளைமாக்ஸ்  இழுவையாய்  இழுக்கிறார்கள்.அந்த  சண்டைக்காட்சியை  இன்னும்  கொஞ்சம்  சுவாரஸ்யமாய்  க்ரிஸ்பாய்  அமைத்திருக்கலாம்.மற்றபடி  இது  நல்லதொரு  பொழுதுபோக்கு  சினிமா.லாஜிக்  எல்லாம்  பார்க்காமல் ரசிக்கலாம்.ராஜ்  டிஜிட்டலில்  அவ்வப்போது  காண முடியும்.