Saturday 28 January 2017

The Young lions(1958)

                     போர் பின்னணி கொண்ட  படங்களில் ஒரு  டெம்ப்ளேட் இருக்கும்.உதாரணமாக  இரண்டாம்  உலகப்போர் பின்னணி  என்றால்  ஜெர்மானியர்கள்  அனைவரும் கெட்டவர்கள்
 என்பதுபோலவும்  அமெரிக்கர்கள் அல்லது பிரித்தானியர்கள்   வந்து  அந்நாட்டிற்கு  பாவ விமோசனம் கொடுப்பதாகவும் சித்தரித்திருப்பார்கள்.ஹிட்லர்  எழுச்சி பெற்ற காலத்தில்  அவரை அமேரிக்கா  உள்ளிட்ட  நாடுகள்  ஆதரித்ததை பற்றி எவரும் பேசுவதில்லை.
            போர்  சார்ந்த  படங்களில் மற்றொன்று-  மிகையான  தேசபக்தி என்ற  பேரில்  அமெரிக்க வீரர்கள்  அனைவரும் அண்ணன் தம்பி போல  பழகுவதாகவும் ஒற்றை  எதிரி  ஜெர்மானிதான்  என்பதுபோன்ற    சித்தரிப்புகளை கொண்ட  படங்களும்  உண்டு.
டீன் மார்டின்

          ஆனால்  இப்படம்  அப்படியல்ல.வெவ்வேறு பின்னணியில் வந்த இரண்டு  இளைஞர்கள் அமெரிக்க ராணுவத்தில்  சேர்கிறார்கள்.நோஞ்சான் போல  இருக்கும்   யூதர்   மான்ட்காமரி க்ளிப்ட்(Montgomery Clift),வசதியான  பின்னணியில் வந்த  டீன்  மார்ட்டின்(Dean Martin) இருவரும்  ராணுவத்தில்  நட்பு  பாராட்டுகிறார்கள்.அது  ஒருபுறம்  இருந்தாலும்  நோஞ்சான் ஆக்கேர்மேன்(மாண்ட்காமரி) தொடர்ந்து சக  ராணுவ  வீரர்களால்  தொடர்ந்து கேலிக்கும்  கிண்டலுக்கும்  அடி   உதைக்கும்  ஆட்படுத்தப்படுகிறார்.ஆனாலும்  அவர் அதைக்கண்டு  அஞ்சாமல் அவர்களை  எதிர்கொள்கிறார்.நான்கு பேரோடு தினம்  ஒருவராய்  சண்டை போடும் காட்சியை சொல்லலாம்.மூன்று பேரிடம்  செம அடி வாங்கி விடுகிறார்.நான்காவது ஆளை திரும்ப  அடித்து வெல்கிறார்.
ஆக்கேர்மேன்

                        சுற்றி இருப்பவர்கள் stay down man என  சொன்னாலும் கேட்காமல்   ஆக்கேர்மேன் அடி    வாங்குவதை  பார்க்கும்போது  Cool Hand Luke படத்தில்  வரும்  லூக் நினைவுக்கு வராமல்  இல்லை.இதைப்பார்த்து  அந்த  கதாபாத்திரத்தை  உருவாக்கினரா  என்பது  தெரியவில்லை.
       இது ஒருபுறம்  இருக்க  மற்றொரு  கதைக்களனாய்  ஜெர்மனியர்கள்.ஜெர்மனியரான கிறிஸ்டியன்  டீஸ்டேல்(மார்லன் பிராண்டோ) பனிச்சறுக்கு பயிற்றுவிப்பராய் உள்ளவர்.ஹிட்லரின் பேச்சுக்களால்  கவரப்படுகிறார்.தொடர்ந்து நசுக்கப்படும் ஜெர்மனியை மீட்டெடுக்கும்  மீட்பராய்  அவரைக்காண்கிறார்.இது குறித்து  அவருக்கும்  அவரது காதலிக்கும்  இடையே நடக்கும் விவாதம்  மிக  நுட்பமாய் கயிற்றின் மேல்  நடப்பது போல எழுதப்பட்டுள்ளது.
 And with political discussions we go round and round and nothing is ever settled!
             
                               இரண்டாம்  உலகப்போர்  துவங்கியவுடன் ஆவலோடு படையில்  இணைகிறார் கிறிஸ்டியன்.ஆனால்  அதற்குப்பின்  நடக்கும்  எதுவுமே  அவருக்கு  உடன்பட்டதாய் இல்லை.வறுபுறுத்தி ஜெர்மானியர்களை வீடு  வீடாய் தேடிப்பிடித்து  ராணுவத்தில்  சேர்க்கும்  பணியில் இருக்கும்போதும்  சரி,உயரதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து  அறையில் கெஸ்தாபோ யூதர்களை  அடித்து நொறுக்கும்  சத்தம் கேட்டு பொறுக்காமல் அதை  தடுக்க முற்படுவதாய் இருக்கட்டும்,பிறகு  முற்றிலும்  ஹிட்லரின் கொள்கைகளில்  செயல்பாடுகளில்  போரில் நம்பிக்கை இழந்தவராய் கடமைக்கு ராணுவத்தில் இருப்பதாய்  இருக்கட்டும் .ஹிட்லரின் படையில் இருப்பவர்  என்பதாலேயே  அவர்  ஹாஹா  என  சிரித்தபடி  அனைவரையும்  கொடுமைப்படுத்தும்  கதாபாத்திரமாக  வடிவமைக்காமல்  இப்படி மனிதத்தன்மையுள்ள ஒருவராய்  கிறிஸ்டியன் கதாபாத்திரம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.அப்படி  வடிவமைத்தது பெரிதல்ல!அதை நம்பகத்தன்மையோடு திரையில் நடிக்க  ஒரு  நடிகர் வேண்டும்!

                         

                   அமெரிக்க  படைகள்  நடத்திய  தாக்குதலில் தப்பித்து  இரண்டு  நாட்கள்  சோறு  தண்ணி  உறக்கம்  இல்லாமல் ஒரு  ஜெர்மானிய ராணுவ முகாமுக்கு வந்து சேரும்  பிராண்டோவின் முகத்தை உடல்மொழியை கவனித்தால்  இவர்  நிஜமாகவே இரண்டு  நாட்கள்  உண்ணாமல்  உறங்காமல்  கடும்  மன  உளைச்சலில்  இருந்தபடியே நடித்திருப்பார்  என்றுதான் தோன்றுகிறது!அவர்  அப்படி  செய்யக்கூடிய  ஆள்தான்!இவரின்  நடிப்பை  பார்த்துவிட்டு  கொஞ்சநாளக்கி வேற  யார்  நடிச்ச  படத்தையும்  பார்க்கமுடிவதில்லை!

என்னைப்பொறுத்தளவில்  போர் என்ற விஷயத்திலேயே உடன்பாடு இருந்ததில்லை!வெறுமனே தேசபக்தியை கிளறிவிட்டு மக்களை உணர்ச்சியின் உச்சத்தில் நிறுத்தி சண்டை போடவைத்து அவர்கள் உயிரை எடுப்பது அர்த்தமற்றது!மேலும் போரில் தோற்றதாக சொல்லப்படும் நாடு மட்டுமல்ல வென்றதாக சொல்லப்படும் நாட்டின் பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாமே அதலபாதாளத்திற்கு செல்லும்!
              முதல் உலகப்போரில் ஜெர்மனி நசுக்கப்பட்டதன் விளைவாகவே ஹிட்லர் எழுச்சி பெற்றார்!அதனால் இரண்டாம் உலகப்போர்!அத்தோடு  உலகம் திருந்தியதா  என்றால் இல்லை!வியட்நாம் ,ஈராக்,ஆப்கன் சிரியா என்று கொலைவெறி யுத்தங்கள் இன்றும் தொடர்கதையே!அதன் எதிர்வினையாக இன்று மூலைக்கு மூலை பல்வேறு தீவிரவாத இயக்கங்கள்!அதற்கும் காரணம் வல்லரசு நாடுகளின் போர் வெறியே!
              நாஸி படையை சேர்ந்தவர்/அல்லது ஜெர்மானியர் என்பதாலேயே ஒருவர் தீயவர் என்ற பொதுபுத்தியில் காட்டாமல் ,நாஸி அரசு என்ற ஈவிரக்கமில்லா எந்திரத்தின் கட்டாயத்தாலேயே படையில் சேர்ந்தோர் பலர்.அல்லது ஹிட்லரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு படையில் சேர்ந்து பிறகு disillusion ஆகி வெளியேறவும் முடியாமல் எதிர்ப்பை தெரிவிக்கவும் முடியாமல் நடைபிணமானோர்களில் ஒருவராக பிராண்டோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
            இப்படம் வெறுமனே இருபக்கமும் இருநாடுகள் நின்று சண்டை போடுவதை வீர சாகசமாக காட்டாமல் போரில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவ வீரர்களின்/பொதுமக்களின் மனஓட்டத்தை விரக்தி நிலையை,இழப்புகளை கண்ணீரை சொல்வதாக உள்ளது!