Saturday 16 December 2017

அருவி

                                         I exist, that is all, and I find it nauseating-Sartre 

                 வாழ்தல் என்பதைவிட அபத்தமான செயல் எதுவும் இருக்க முடியாது!பல அபத்த கணங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டதே ஒருவரின் வாழ்க்கை!அர்த்த வெங்காயங்கள் பிறகு கற்பிக்கப்பட்டவை!வாழ்வின் மீதான பிடிப்பு ஏற்பட ஒரு லாரி சக்கரை பூச்சு பூசி மெழுகி உண்டாக்கப்பட்ட ஒரு தோற்றம்!அவ்வளவே!

                   நாம் காணும் வணிக  சினிமாக்கள் தொடங்கி ,தெருவின் சந்து பொந்தெல்லாம் நம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் ஜிகினா விளம்பரங்கள் வரை எல்லாமே நம்மை வாழ கட்டாயப்படுத்துவதே!எந்த மாதிரியான வாழ்க்கை?படிப்பு வேலை மனைவி வீடு குழந்தைகள் சரவணா ஸ்டோர்ஸ்  blah blah என்பதே லட்சிய வாழ்வு!அதை எப்படியாவது வாழ்ந்து தொலைக்கத்தான் எத்தனை கேப்மாரித்தனங்கள்! கோமாளித்தனங்கள்! எத்தனை துரோகங்கள்!

                மேற்கூறிய விஷயங்கள் படத்தில் வசனமாகவே வருது.கொஞ்சம் நீளமாவே போய்விட்டது என்றாலும் வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை இவ்வளவு அப்பட்டமாக பேசிய தமிழ் படம் இதுதான் என நினைக்கிறேன்!ஆனால் அதை முழுமையாக செய்திருக்கிறார்களா?என்றால் இல்லை.

            "இந்தமாதிரி குப்பை வாழ்க்கை வாழுறதுக்கு எய்ட்ஸ் வந்து செத்துபோலாம்" என்று அல்டிமேட்டா ஒரு வசனத்தை அருவி பேசுகிறார்!தேட்டர்ல நான் கைத்தட்டிய இடமும் அதான்!ஆனால் அருவியின் கதாபாத்திர தன்மை என்பது ஒரேபோல இருக்கவில்லை.

             வாழ்க்கைக்கு எந்த வெங்காய அர்த்தமும் இல்லை!அதன் போக்கில் வாழும் அருவி ;வாழ்வின் randomness ஐ  தன் கையில் எடுத்துக்கொண்டு சுற்றி இருப்பவரை ஆட்டிவைக்கும் அருவி திடீரென்று கைது செய்யப்பட்ட பிறகு உடைந்து நொறுங்கி போவதாக காட்டியது அருவியின் பாத்திரப்படைப்பில் விலகிப்போனதாகவே  எனக்கு தோன்றியது!
    நோயின் தீவிரத்தால் அப்படியான ஒரு உடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினாலும் திடீரென்று Hrishikesh Mukherjee ன் படம் பாத்துக்கொண்டிருக்கிறோமோ(ஆனந்த்,மிலி) ஒரு குழப்பம் வந்துட்டுது!நோயின் தாக்கம் குறைவாக உள்ளவரை வாழ்க்கையை எள்ளி நகையாடிய அருவி நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மேலும் ஒருநாளாவது கூடுதலாக வாழ்ந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார்.
Mili(1975)


        இந்த இடத்தில் ஒரு கிடாயின் கருணை மனு படம் பற்றிய எனது பதிவிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது:
அபத்த நகைச்சுவையை ரணகளமாக ஆரம்பித்த இயக்குனர் "ஐயோ டெட் பாடிய வச்சிட்டு காமெடி பண்றோமே!யாராச்சும் திட்டிடுவாங்களோ?" என்ற பயத்தில் அப்படியே கொஞ்சம் செண்டிமெண்ட் உருக்க்கம்னு திசைமாறுகிறார்.அபத்த நகைச்சுவைதான் எடுக்கபோறோம் என்று முடிவு செய்துவிட்டால் ஈவு இரக்கம் செண்டிமெண்டு எதையும் பாக்காம அடிச்சி தூக்கணும்
          இந்தப்படத்திலும் இந்த திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது!முக்காவாசி படத்துக்கு பிறகான மாற்றம் ஒருபுறம் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த கிராமத்து பணியாரக்கிழவி தொடர்பான காட்சி தனித்து தெரியுது!கொஞ்சம் இந்த இடத்தில் செண்டிமெண்டா காட்சி வைப்போம் என்று வைத்தாற்போல!அதையும் ரசிப்போர் உண்டு.இது எனது சொந்த கருத்து!


                          வாழ்க்கை என்பது அவலம் என்று தெரியாமலேயே அதை படு சீரியஸா அணுகி அணுகி பை-பாஸ் ஆபரேஷன் வரை போவோர்தான் இன்று அதிகம்.வாழ்வின் அவலத்தை தனியே எடுத்துக்காட்டினால் அதைக்கண்டு சிரிப்போரும் அவர்களே!தியேட்டரே சிரிப்பலையில் குலுங்கியது என்ற க்ளீஷே மேற்கோளை இங்கே பயன்படுத்தவேண்டியுள்ளது.
         இதைத்தவிர படத்தின் transgressive தன்மையை பாராட்டலாம்!ஸீரோ டிகிரி நாவலின் நடுவில் அவந்திகாவின் கதை வந்தது போல இதிலும் செண்டிமெண்டா திசை மாறுகிறது!ஆனாலும் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டத்தான் வேண்டும்.பெரிய ஈரோ படமெல்லாம் ஆயிரம் தேட்டரில் அசிங்கம் பண்ணிட்டு இருக்கும்போது இதுபோன்ற படங்களுக்கு குறைந்த அளவு தியேட்டரே  கிடைத்திருக்கும் அவலத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது!

        அருவி கேரக்டர் அதிதி பாலனுக்காகவே  என்பது போல இருந்தது!சொந்தக்குரலில் பேசியிருக்கிறார் என்று நினைக்கறேன்.லூசு  மாதிரி சிரிப்பது;போலியா blush பண்ணுதல்;கழுத்து சுளுக்கும் அளவுக்கு படம் முழுக்க அலைபாயும் கூந்தலை காற்றில் பறக்கவிட்டபடி திரும்பி பார்த்தல் என்ற கூத்துகள் இல்லாமல் இருந்தது!நல்லா ரெண்டு இன்ச்சு மேக்கப்பை பூசி மெழுகாமல் இயல்பான தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்!


அப்புறம் இதுவரை மற்றவர்கள் இப்படம் பற்றி எழுதிய பதிவில் குறிப்பிட்ட பொதுவான விஷயம் "முதல் பாதி செம காமெடி!இரண்டாம் பாதியில் அழவைத்துவிட்டார்கள்" .அழவைக்கும் அளவுக்கு என்ன இருக்கு?மரணம்தான்   விடுதலை!
The Man Who wasnt there  படத்தில் கடைசியில் Ed மரண தண்டனை பெற்று மின்சார நாற்காலியில்  அமரும் வரை அந்த அவல நகைச்சுவைதன்மை விலகாமலே இருக்கும்!