Sunday 5 May 2024

Blow Out மற்றும் சில மர்ம வழக்குகள்!

 பொதுவாக இந்த பிரபல படுகொலை வழக்குகள்,மர்ம மரணங்கள் ஆகியவைகளுக்கு இடையே ஒருவித ஒற்றுமை உண்டு. இரண்டுவகையான வழக்குகள் குறித்த பேச்சுக்கள் விவாதங்கள் எல்லாம் அந்த சம்பவம் நடந்தவுடனே சுனாமி போல எழும்.பிறகு அதிகபட்சம் சில மாதங்கள்; ரொம்ப பிரபலமாக இருந்தால் சில ஆண்டுகள் அதைப்பற்றி பேச்சு ; அந்த வழக்கு என்னவானது என்ற கேள்வி போன்றவைகள் இருக்கும்.பிறகு? நிசப்தம்!

    Brian De Palma  இயக்கிய Blowout படம் அந்தவகையில் நமக்கு மிக மிக பிடித்த படம்.படம் எடுக்கப்பட்ட விதம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் படத்தில் நம்மை ஈர்த்தது அந்த நேர்மை.யதார்த்தத்தை நேர்மையாக காட்டிய படமது.



     அமெரிக்க ஜனாதிபதிக்கான பிரைமரி போட்டியில் முன்னணியில் இருக்கும் ஒருவர்,நிச்சயமாக அவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று அனைவருமே நம்பும் ஒருவர் காரோடு நீர் நிலையில் விழுந்து இறக்கிறார் .
       அந்த இடத்திற்கு அருகே தனது திரைப்பட ஒலி தொகுப்பிற்காக இயற்கை ஒலிகளை பதிவு செய்துகொண்டிருக்கும் நாயகன் அந்த கார் விழும் ஒலியையும் பதிவு செய்கிறான்.அந்த பிரபலம் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருப்பதை ரகசியமாக போட்டோக்கள் எடுக்கிறார் இன்னொருவர்.அவைகளை பிறகு இணைத்து ஒரு வீடியோவாக ஆக்கி பார்த்தால் காரின் டயர் சுடப்பட்டு அதனாலேயே நிலை தடுமாறி கார் நீரில் விழுந்தது என்பதை கண்டுபிடிக்கிறார் நாயகன்.
     பிறகு அதை அம்பலப்படுத்த எடுக்கும் முயற்சி கடைசியில் மொத்தமாக சின்னாபின்னமாகி விடுகிறது .தனது காதலியையும் இழக்கிறான்.படம் அத்தகைய வெறுமையில் தான் முடிகிறது.
     நிஜ வாழ்வில் ஜான் எஃப் கென்னடி அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலை வழக்குகளை சில ஆண்டுகளுக்கு முன் டாப் டூ பாட்டம் படித்ததில் தலை சுற்றியதுதான் மிச்சம்.அவ்வளவு குளறுபடிகள் குழப்பங்கள் வினோத திசை திருப்பல்கள்.வாரன் கமிஷன் அறிக்கை என்பது ஒரு கட்டுக்கதை என்பது கென்னடி இருந்த ஜனநாயக் கட்சிக்கும் தெரியும்.அமெரிக்க மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும்.இருந்தாலும் என்ன செய்ய முடிந்தது??நிசப்தம்!




     ராஜீவ் படுகொலை நிகழ்ந்த அடுத்த நாள் தொடங்கி ஜெயின் கமிஷன் அறிக்கை வரை தொடர்ந்து விடாமல் நாள்தோறும் செய்தித்தாளில் அந்த செய்தியை வாசிப்பது நமது வழக்கமாக இருந்தது.ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல " முதல் பக்கம் எட்டு பத்திக்கு இருந்த செய்தி கடைசி பக்கத்தில் கால் பத்தியாக .." மாறும் வரையில் வாசித்தோம்.
     ஏகப்பட்ட குழப்பங்கள் ஓட்டைகள் பல்டிக்கள்....பிறகு bigger conspiracy ஐ கண்டுபிடிக்க 1999 இல் பல்நோக்கு விசாரணை குழுமம் அமைக்கப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது.சரி இத்தனை ஆண்டுகள் செயல்பட்ட அந்த குழுமத்தின் கண்டுபிடிப்புகள் என்ன?யாரையெல்லாம் விசாரித்தார்கள்?இத்தனை ஆண்டுகள் என்னதான் செய்தார்கள்???நிசப்தம்!
     சில ஆண்டுகளுக்கு முன் மீடியாவை உலுக்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம்.அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது மேனேஜர் திஷா சாலியான் மர்ம மரணம் .இருவர் மரணமும் "தற்கொலை" என்றார்கள்.



    சமீபத்தில் சுஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்த மார்ச்சுரி காவலாளி சுஷாந்த் உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் இது குறித்து மருத்துவர்களிடம் கூறிய போது அமைதியாக இருக்கும்படி அவர்கள் கூறியதாக சொன்னார் .இவரே வழக்கு நடக்கும்போது இதை பேசவில்லை.

திஷா சாலியான்


    மேலும் திஷாவின் மர்ம மரணத்தில் சம்மந்தப்பட்ட அந்த இரு பெரும் மராட்டிய  புள்ளிகள் சுஷாந்த் வழக்கிலும் சம்பந்தப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. சுஷாந்த் நடிகர் மட்டுமல்லாது தீவிர அறிவியல் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.அவர் மிக குறைந்த செலவில் படம் தயாரிக்கும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.அதற்கும் அவரது மர்ம மரணத்துக்கும் சம்மந்தம் உண்டா?அவரோடு தொடர்புடைய நான்கைந்து நண்பர்கள் மர்மமாக இறந்தது/காணாமல் போனது என்று ஏகப்பட்ட குழப்பங்கள்.சி. பி.ஐ விசாரணைக்கு எடுத்து நான்காண்டுகள் ஆகிறது.வழக்கில் என்ன முன்னேற்றம்??நிசப்தம்.
     இதேபோல ஜியா கான் மரணம்,(காதலர் தினம்) குணால் மும்பையில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் என்னாவாகின?சுனந்தா புஷ்கர் மரணம் நிகழ்ந்து பத்தாண்டுகள் ஆகிறது.அந்த வழக்கின் நிலை என்ன???நிசப்தம்!
     இப்போது பதிவின் ஆரம்பத்தில் பகிரப்பட்ட Blowout போஸ்டரில் ஜான் டிரவோல்ட்டாவின் முகபாவத்தை பாருங்கள்.தொடர்ந்து இந்த மர்மமான குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை பின் தொடர்ந்த ஒரு நபரின் முகபாவம் அப்படித்தான் இருக்கும்!
     





Sunday 28 April 2024

Animal Park

 இப்படியொரு வெளியானதே முதலில் நமக்குத்தெரியாது.படம் வெளியான பிறகு ஆளாளுக்கு cringe cringe cringe என்று கிரிஞ்சித்தள்ளிய போதுதான் "இப்படி எல்லாரும் cringe ஆகிறார்கள் என்றால் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படமாகத்தான் இருக்கும்" என்றொரு எண்ணம் ஏற்பட்டது.(முனியாண்டியின் ஆரம்பக்கால எழுத்துக்களை ஒன்று விடாமல் படித்த உதயாவின் சிந்தனை வேறு எந்தமாதிரி இருக்கப்போகிறது?? - கும்மாங்கோ)

 

       தற்கால படங்கள் ,அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி - wokism தளும்பத்தளும்ப இருப்பது வழக்கம்.அதுதவிற புது மோஸ்தர் பெண்ணியம் முதலாளித்துவ எதிர்ப்பு விவசாய ஆதரவு ..etc...etc..,
     எந்த மொழி புதுப்படத்தையும் பார்ப்பதற்கு முன்னர் ஆர். ஓ வில் வடிகட்டி பார்ப்பதற்கு காரணம் அதுதான்.
      மேலும் ஆல்ஃபா மேல் என்பதெல்லாம் தொண்ணூறுகள் வரையில் ரஜினி நடித்த படங்களை அவ்வகையில் சொல்லலாம்.பிறகு அவரை முள்ளும் மலரும் எங்கேயோ கேட்ட குரல் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கபாலி காலா லால் ஸலாம் என்றெல்லாம் சரிந்துவிட்டார்.மற்ற ஹீரோக்களும் அவ்வாறே! கேப்புடனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் ஆக்ஷன் அத்தியாயம் முடிந்தது தனிக்கதை.
       ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில் ' ஆல்ஃபா மேல் ' குறித்த வசனங்கள் இடம்பெறாது.இப்படத்தில் அது கடுப்பை உண்டாக்கியது.
     மற்றபடி இப்படம் தந்தை மகன் பாசப்பிணைப்பை மையமாக கொண்டதாக கூறப்பட்டாலும் ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால் படம் நெடுக "மகனே" "அப்பா" என்று பாச குழைவுகள் இல்லை .இன்னும் சொல்லப்போனால் தந்தை மகனை வெறுக்கிறார். தன் அருகிலேயே அவன் இருப்பது பிடிக்காதவராக இருக்கிறார்.
    மகன்தான் தந்தையை சூப்பர் ஹீரோவாக பார்க்கிறான்.தனது கடைசி காலத்தில் தான் மகன் மீது பாசத்தை காட்டுகிறார்.இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.படத்தில் பலம் இதுதான்.
      மற்றபடி படம் நெடுக ஜட்டி ஜி string என்றெல்லாம் வருகிறது.ஒருகட்டத்தில் அது ஓவர் டோசாக போய்விடுகிறது என்றாலும் முனியாண்டியின் எழுத்துக்களில் ஊறியவர்களுக்கு இது சங்கடமாக தெரியாது 😃 (பின்னே உதயாவின் சிந்தனை உருப்படியாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்? - த.மணியன்).
     படத்தின் சண்டைக்காட்சிகளில் நமக்கு பிடித்தது அந்த ஹோட்டல் காரிடாரில் வரும் ரத்தக்களரி தான்.அந்நியன் படத்தில் இப்படி ஒரே ஆக் நூற்றுக்கணக்கான ஆட்களுடன் மோதும் காட்சி இருந்தாலும் அதில் மேட்ரிக்ஸ் பாதிப்பு ஓவராக போய் படம் பார்த்து கொண்டிருப்பவனையே ரோப்ல தொங்க விடும் அளவு சென்றது . அன்னியனில் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது வாத்தியார் ஷூட்டிங் ஸ்பாட் சென்றிருந்தார் ."அந்நியன் துரத்த ...சதா ஓட...ஆக்ஷன் பிளாக் ...இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நான் இருந்தால் என்னையும் கயிற்றில் கட்டி மிதக்க விட்டுவிடுவார்கள் என்று அங்கிருந்து தப்பித்தேன்" என்று எழுதி இருந்தார் (அசல் வார்த்தைகள் அல்ல.நினைவில் இருந்து எழுதுகிறோம்).
      அது மாதிரி எல்லாரும் சம்பந்தமில்லாமல் காற்றில் பறக்காமல் ஒரு சண்டைக்காட்சி.நன்றாகவே இருந்தது. அசுரவதம் என்ற மகா திராபை படத்தில் இதே போல ஹோட்டல் காறிடாரில் சசிகுமார் ஒற்றை ஆணியை வைத்து வில்லன்களை காலி செய்வார்(திலீப் சுப்பராயன்).கொஞ்சம் அதையே மிக பிரம்மாண்டமாக எடுத்தது போல இருந்தது.
    பாபி தியோல் படங்களை அதிமாக நாம் பார்த்ததில்லை. பிச்சூ  பார்த்ததாக நினைவு .இப்படத்தில் ஒரு வினோதமான தோற்றத்துடன் வருகிறார் .அந்த மத்திய கிழக்கு தோற்றம் அந்த கேரக்டருக்கு பொருந்துகிறது. மெட்ரோ ஆட்டாம் பிரித்விராஜ் வீணடிக்கபட்டுள்ளார்.சிக்ஸ் பேக்ஸ் சகிதம் குறுக்க மறுக்க நடப்பதோடு சரி.இவர் வயதான அல் பசினோவை சில கோணங்களில் நினைவூட்டுகிறார் (நடிப்பில் அல்ல.தோற்றத்தில் மட்டும்).
     ரன்பீர் கபூர் சஞ்சு பட பாதிப்பில் இருந்து மீளவே இல்லையா?இல்லை சஞ்சு படம் பார்த்த நமக்கு அந்த கதாபாத்திர நினைவு கண்முன் நட்டுகுத்தலாக நிற்கிறதா என்று சொல்லத்தெரியவில்லை.ஆனால் பெரிய ஃபங்க் தலைமுடியுடன் வரும் பிளேஸ் பேக் காட்சியில் அப்படியே சஞ்சு பாபா போலவே இருக்கிறார்!ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கட்டுடல் மேனியோடு வருவது சக் நாரிஸ் & ரஜினிகாந்த் ஆகியோரை ஒன்றாக பார்த்த உணர்வு வந்தது 😃
     ராஷ்மிகா நடித்த படத்தை பார்ப்பது இதுவே முதல்முறை .பிந்து கோஷ்  குண்டு ஆர்த்தி ஆகியோர் திரையில் வந்தால் எப்படி பார்வையாளன் "ஓ இப்ப காமெடி காட்சி வரும் " என்று நினைப்பானோ அப்படியான உணர்வே இவரைக்கண்டால் வருகிறது 😃

       தான் ஆங்கிலம் பேசத்தெரியாமல் இருப்பது போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று இன்று பல பெற்றோர் பிள்ளைகளை லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்கும் பள்ளியில் சேர்ப்பதோடு நில்லாமல் அவர்களை ஆங்கிலத்தில் மட்டுமே பேச வைத்து பழகுகிறார்கள்.ஆனால் என்னதான் தமிழோ அல்லது வேறு தாய்மொழியோ தெரியாமல் வளர்த்தாலும் அந்த பிள்ளைகள் பேசும் ஆங்கிலம் அப்படியே அந்த தாய் மொழி போலத்தான் ஒலிக்கிறது!பீட்டர் செல்லர்ஸ் The Party படத்தில் "இந்திய" ஆங்கிலத்தில் அட்டகாசமாக பேசி நடித்திருப்பார் .அதே accent தான் இன்றும் உள்ளது!அதே தொனியில் தான் ராஷ்மிகா ஆங்கிலம் பேசுகிறார்! 😃அந்தக்காட்சிகள் எல்லாம் அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்கியது.குறிப்பாக பல்லை கடித்துக்கொண்டு ஆறடி ரன்பீரை அண்ணாந்து பார்த்தபடி அவர் பேசும் முகபாவம் அதைவிட தமாஷாக இருந்தது.உண்மையில் இவர் கொஞ்சம் முயன்றால் சிறந்த நகைச்சுவை நடிகை ஆகலாம்!(கிண்டல் அல்ல).
     நமக்கு cringe ஆகும் விஷயங்கள் என்றால் புது மோஸ்தர் பெண்ணியம்,wokism,கார்ப்பரேட் எதிர்ப்பு,ஏழ்மையை விதந்தோதுதல்,தற்கால அரசியல் நிகழ்வுக்கு "ஆட்சிக்கு தகுந்தாற்போல்" பொங்கல் வைத்தல் போன்றவைகளே!
    இப்படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள்.பொதுவாக எந்தப்பட இரண்டாம் பாகமும் (இந்திய மொழிகளில்)எடுபட்டதில்லை.பார்ப்போம்!