Sunday 28 April 2024

Animal Park

 இப்படியொரு வெளியானதே முதலில் நமக்குத்தெரியாது.படம் வெளியான பிறகு ஆளாளுக்கு cringe cringe cringe என்று கிரிஞ்சித்தள்ளிய போதுதான் "இப்படி எல்லாரும் cringe ஆகிறார்கள் என்றால் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படமாகத்தான் இருக்கும்" என்றொரு எண்ணம் ஏற்பட்டது.(முனியாண்டியின் ஆரம்பக்கால எழுத்துக்களை ஒன்று விடாமல் படித்த உதயாவின் சிந்தனை வேறு எந்தமாதிரி இருக்கப்போகிறது?? - கும்மாங்கோ)

 

       தற்கால படங்கள் ,அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி - wokism தளும்பத்தளும்ப இருப்பது வழக்கம்.அதுதவிற புது மோஸ்தர் பெண்ணியம் முதலாளித்துவ எதிர்ப்பு விவசாய ஆதரவு ..etc...etc..,
     எந்த மொழி புதுப்படத்தையும் பார்ப்பதற்கு முன்னர் ஆர். ஓ வில் வடிகட்டி பார்ப்பதற்கு காரணம் அதுதான்.
      மேலும் ஆல்ஃபா மேல் என்பதெல்லாம் தொண்ணூறுகள் வரையில் ரஜினி நடித்த படங்களை அவ்வகையில் சொல்லலாம்.பிறகு அவரை முள்ளும் மலரும் எங்கேயோ கேட்ட குரல் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கபாலி காலா லால் ஸலாம் என்றெல்லாம் சரிந்துவிட்டார்.மற்ற ஹீரோக்களும் அவ்வாறே! கேப்புடனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் ஆக்ஷன் அத்தியாயம் முடிந்தது தனிக்கதை.
       ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில் ' ஆல்ஃபா மேல் ' குறித்த வசனங்கள் இடம்பெறாது.இப்படத்தில் அது கடுப்பை உண்டாக்கியது.
     மற்றபடி இப்படம் தந்தை மகன் பாசப்பிணைப்பை மையமாக கொண்டதாக கூறப்பட்டாலும் ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால் படம் நெடுக "மகனே" "அப்பா" என்று பாச குழைவுகள் இல்லை .இன்னும் சொல்லப்போனால் தந்தை மகனை வெறுக்கிறார். தன் அருகிலேயே அவன் இருப்பது பிடிக்காதவராக இருக்கிறார்.
    மகன்தான் தந்தையை சூப்பர் ஹீரோவாக பார்க்கிறான்.தனது கடைசி காலத்தில் தான் மகன் மீது பாசத்தை காட்டுகிறார்.இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.படத்தில் பலம் இதுதான்.
      மற்றபடி படம் நெடுக ஜட்டி ஜி string என்றெல்லாம் வருகிறது.ஒருகட்டத்தில் அது ஓவர் டோசாக போய்விடுகிறது என்றாலும் முனியாண்டியின் எழுத்துக்களில் ஊறியவர்களுக்கு இது சங்கடமாக தெரியாது 😃 (பின்னே உதயாவின் சிந்தனை உருப்படியாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்? - த.மணியன்).
     படத்தின் சண்டைக்காட்சிகளில் நமக்கு பிடித்தது அந்த ஹோட்டல் காரிடாரில் வரும் ரத்தக்களரி தான்.அந்நியன் படத்தில் இப்படி ஒரே ஆக் நூற்றுக்கணக்கான ஆட்களுடன் மோதும் காட்சி இருந்தாலும் அதில் மேட்ரிக்ஸ் பாதிப்பு ஓவராக போய் படம் பார்த்து கொண்டிருப்பவனையே ரோப்ல தொங்க விடும் அளவு சென்றது . அன்னியனில் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது வாத்தியார் ஷூட்டிங் ஸ்பாட் சென்றிருந்தார் ."அந்நியன் துரத்த ...சதா ஓட...ஆக்ஷன் பிளாக் ...இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நான் இருந்தால் என்னையும் கயிற்றில் கட்டி மிதக்க விட்டுவிடுவார்கள் என்று அங்கிருந்து தப்பித்தேன்" என்று எழுதி இருந்தார் (அசல் வார்த்தைகள் அல்ல.நினைவில் இருந்து எழுதுகிறோம்).
      அது மாதிரி எல்லாரும் சம்பந்தமில்லாமல் காற்றில் பறக்காமல் ஒரு சண்டைக்காட்சி.நன்றாகவே இருந்தது. அசுரவதம் என்ற மகா திராபை படத்தில் இதே போல ஹோட்டல் காறிடாரில் சசிகுமார் ஒற்றை ஆணியை வைத்து வில்லன்களை காலி செய்வார்(திலீப் சுப்பராயன்).கொஞ்சம் அதையே மிக பிரம்மாண்டமாக எடுத்தது போல இருந்தது.
    பாபி தியோல் படங்களை அதிமாக நாம் பார்த்ததில்லை. பிச்சூ  பார்த்ததாக நினைவு .இப்படத்தில் ஒரு வினோதமான தோற்றத்துடன் வருகிறார் .அந்த மத்திய கிழக்கு தோற்றம் அந்த கேரக்டருக்கு பொருந்துகிறது. மெட்ரோ ஆட்டாம் பிரித்விராஜ் வீணடிக்கபட்டுள்ளார்.சிக்ஸ் பேக்ஸ் சகிதம் குறுக்க மறுக்க நடப்பதோடு சரி.இவர் வயதான அல் பசினோவை சில கோணங்களில் நினைவூட்டுகிறார் (நடிப்பில் அல்ல.தோற்றத்தில் மட்டும்).
     ரன்பீர் கபூர் சஞ்சு பட பாதிப்பில் இருந்து மீளவே இல்லையா?இல்லை சஞ்சு படம் பார்த்த நமக்கு அந்த கதாபாத்திர நினைவு கண்முன் நட்டுகுத்தலாக நிற்கிறதா என்று சொல்லத்தெரியவில்லை.ஆனால் பெரிய ஃபங்க் தலைமுடியுடன் வரும் பிளேஸ் பேக் காட்சியில் அப்படியே சஞ்சு பாபா போலவே இருக்கிறார்!ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கட்டுடல் மேனியோடு வருவது சக் நாரிஸ் & ரஜினிகாந்த் ஆகியோரை ஒன்றாக பார்த்த உணர்வு வந்தது 😃
     ராஷ்மிகா நடித்த படத்தை பார்ப்பது இதுவே முதல்முறை .பிந்து கோஷ்  குண்டு ஆர்த்தி ஆகியோர் திரையில் வந்தால் எப்படி பார்வையாளன் "ஓ இப்ப காமெடி காட்சி வரும் " என்று நினைப்பானோ அப்படியான உணர்வே இவரைக்கண்டால் வருகிறது 😃

       தான் ஆங்கிலம் பேசத்தெரியாமல் இருப்பது போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று இன்று பல பெற்றோர் பிள்ளைகளை லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்கும் பள்ளியில் சேர்ப்பதோடு நில்லாமல் அவர்களை ஆங்கிலத்தில் மட்டுமே பேச வைத்து பழகுகிறார்கள்.ஆனால் என்னதான் தமிழோ அல்லது வேறு தாய்மொழியோ தெரியாமல் வளர்த்தாலும் அந்த பிள்ளைகள் பேசும் ஆங்கிலம் அப்படியே அந்த தாய் மொழி போலத்தான் ஒலிக்கிறது!பீட்டர் செல்லர்ஸ் The Party படத்தில் "இந்திய" ஆங்கிலத்தில் அட்டகாசமாக பேசி நடித்திருப்பார் .அதே accent தான் இன்றும் உள்ளது!அதே தொனியில் தான் ராஷ்மிகா ஆங்கிலம் பேசுகிறார்! 😃அந்தக்காட்சிகள் எல்லாம் அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்கியது.குறிப்பாக பல்லை கடித்துக்கொண்டு ஆறடி ரன்பீரை அண்ணாந்து பார்த்தபடி அவர் பேசும் முகபாவம் அதைவிட தமாஷாக இருந்தது.உண்மையில் இவர் கொஞ்சம் முயன்றால் சிறந்த நகைச்சுவை நடிகை ஆகலாம்!(கிண்டல் அல்ல).
     நமக்கு cringe ஆகும் விஷயங்கள் என்றால் புது மோஸ்தர் பெண்ணியம்,wokism,கார்ப்பரேட் எதிர்ப்பு,ஏழ்மையை விதந்தோதுதல்,தற்கால அரசியல் நிகழ்வுக்கு "ஆட்சிக்கு தகுந்தாற்போல்" பொங்கல் வைத்தல் போன்றவைகளே!
    இப்படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள்.பொதுவாக எந்தப்பட இரண்டாம் பாகமும் (இந்திய மொழிகளில்)எடுபட்டதில்லை.பார்ப்போம்!