Tuesday 26 February 2019

Double Bill- Andhadhun & சீதக்காதி



சீதக்காதி 
இந்த ஒன்லைன் சொல்லும்போதும் கேக்கும்போதும் “அட!ரொம்ப வித்தியாசமா இருக்கே” ங்கிற எண்ணம் கண்டிப்பா பெரும்பாலோனோருக்கு வரும்.அப்படித்தான் விஜய் சேதுபதிக்கும் வர நடிக்க சம்மதித்திருக்கிறார்  என்பது தெளிவாவே தெரியுது.உண்மையில் இந்தப்படம் மட்டுமல்ல பட படங்களின் கதைகளை இயக்குனர்கள் சொல்லும்போது அற்புதமா இருந்து கடைசில பைனல் கட் பாக்க சொல்ல “நீ என்ன சொன்ன?என்னத்த எடுத்து வச்சிருக்க?” என்று ஹீரோ மனகண்ணில் இயக்குனரை மவுன்ட் ரோடில் ஓட ஓட அடித்து இழுத்து சென்றிருப்பார்கள்!

      உண்மையில் இந்தப்படம் அய்யா என்ற வயதான நாடக நடிகரை சுற்றியே நிகழுது.படத்தின் அஸ்திவாரமே அதான்!அது எவ்வளவு வலுவா பார்வையாளனை துளைக்கும்படி இருக்கணும்?ஆனா இந்த படத்துல அய்யாவின் பயணம் கால வரிசைப்படி காட்டப்படுது.ஐம்பதுகள் தொடங்கி 2013 வரை..கொஞ்சம் கொஞ்சமா மேடை நாடக கலாச்சாரம் மங்கி மறைந்து போய் ஏதோ கடமைக்கு பத்து பேரு உக்காந்து நாடகம் பார்ப்பதாக தற்காலத்தில் காட்டப்படுது.சரி அது பிரச்சனையில்லை.
    அப்போ என்ன பிரச்சனை?விஜய் சேதுபதி தான்!முதலில் இந்த அய்யா கேரக்டர் கமல் நடிப்பதாக இருந்ததாவும் அவர் ஏதோ காரணத்தால் மறுத்துவிட விஜய் சேதுபதி இதை செய்ததாவும் சொல்லப்படுது.உண்மையில் கமலே இதை செய்திருந்தாலும் சரியா வந்திருக்குமான்னு தெரியல.கமல் பெரும்பாலும்(விதிவிலக்குகளும் உண்டு)  கமல் என்ற பிரக்ஞையிலேயே நடிப்பவர் என்பதால் இந்த அய்யா கேரக்டரிலும் தனது அதிமேதாவித்தனம் மிளிரும்(??)வசனங்கள் எதையாச்சும் வச்சிருப்பார்.இதான் சாக்குன்னு செலக்டிவ் நாத்திகம் பேசி தள்ளியிருப்பார்(யப்பா தசாவதாரம் படத்துல கோவிந்த் பேசுன செலக்டிவ் நாத்திக  பாதிப்புலேர்ந்தே இன்னும் வெளிய வர மிடில-கும்மாங்கோ)


இதுல வி.சே வை நொந்து பயனில்லை.அவர் கதைய கேக்குறாரு.அதுவும் கமலுக்காக இருந்த கதை +அவருக்கு மக்கள் மத்தில இருக்கும் நல்ல பேர(உண்மையில் நடிக்கும் திறனுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னு எனக்கு விலங்கல-உதயா) மேலும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ள ஒரு கேரக்டர்ன்னதும் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்று தெரியுது.அவர் அவரால் முடிஞ்சதை செய்துதான் இருக்கிறார்.இருந்தாலும் அந்த அய்யா கேரக்டருக்கு இது பத்தாது.கமலே பத்த மாட்டார்!வேற யாரு?
      செந்தமிழை(செந்தமிழ்ல இருக்கும் ழ் ஏ 90% தமிழர்களுக்கு உச்சரிக்க வராது) சரியான ஏற்ற  இறக்கத்தோடு பேசுவதோடு உடல்மொழியும் அதோடு 100% பொருந்தி வரும் ஒரு நடிகரை அய்யா கதாபாத்திரம் கோருகிறது.ஆனால் வி.சே வுக்கு சாதாரண தமிழே பேச வராது.எப்பவுமே மெட்ராஸ் பாஷதான்!அவர் வடசென்னை பகுதியை சார்ந்த கேரக்டரா இருந்தாலும் சரி(இப்ப வடசென்னை மீட்பு சீசன் போயிட்டு இருப்பதால் எல்லா படத்துலயும் அந்த ஏரியா கேரக்டர் ஒண்ணு தப்பாம தமிழ்  படங்களில் இடம்பெறும்-உதயா) இல்ல சின்னாளப்பட்டியை  சேர்ந்த ஒரு கேரக்டர் பண்ணாலும் சரி."இன்னா?" என்றுதான் ஆரம்பிப்பார்.மக்களும் விமர்சகர்களும் அதை கண்டுக்கிறது இல்ல! (முன்பே சொன்னது போல மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் ஒரு நடிகன் நடிப்புலயும் வசன உச்சரிப்புலையும் எப்படி சொதபுனாலும் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள்)

   உண்மைல இதுல வி.சே வை குறைகூற முடியாது.இப்படியொரு கேரக்டர் கிடைக்குதேன்னு அவர் ஒத்துகிட்டு செய்திருக்கார்.ஆனா இந்த கேரக்டரை செய்யக்கூடிய சரியான நடிகர் ஒருவர் மட்டும்.சிவாஜி கணேசன்!செந்தமிழ் வசனத்தை  ஏற்ற இறக்கத்தோடு தெளிவாக சரியான முகபாவனையோடு வசனம் பேச அவரைவிட்டால் வேறு ஆளில்லை என்பதே உண்மை.குறிப்பா வி.சே செந்தமிழ் தட்டுதடுமாறி பேசும்போதெல்லாம் சிவாஜி நினைப்புதான்!
அதைத்தாண்டி படத்தை மூணு மணி நேரம் இழுத்தது அந்த ஷூட்டிங் காட்சியையே இருவேறு நடிகர்களை வச்சி வளத்துனது என்று பல குறைகள்.முன்னமே சொன்னது மாதிரி கதையாக யோசிச்சதை கேட்டப்போ நல்லா இருக்கும் ஒரு சப்ஜெக்ட் இது.படமாக்குவதில் பெரும் குளறுபடி!

.*******************************************************************************************************************

அந்தாதூன்.
பொதுவா ஒரு படத்தில் கண் பார்வையில்லாத/காது கேட்காத/வாய் பேசாத...அல்லது வேறு வகை உடல்/உளவியல்  குறைபாடுள்ள கேரக்டரை மூன்று template ல்  காட்டுவதே வழக்கம்.
     1.      அந்த கேரக்டர் மேல அனுதாப அலை வீச வைத்து ஆடியன்சை அழுகாச்சியில் மூழ்கடிப்பது
2.      கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஒரு கேரக்டராக காட்டுவது.3.      சாமானியர்களை விடவும் நேர்மையானவர்களாகவும் அசாத்திய திறன் பெற்றவர்களாகவும் exaggerate செய்வது

இப்ப பொதுவா இருக்கும் “யாரையும் புண்படுத்த கூடாது” டிரெண்டில் முதல் மற்றும் மூன்றாம்  வகை கேரக்டர்களே திரையை நிறைக்கின்றன.இது உடல் குறைபாடுள்ள கேரக்டர்களுக்கு மட்டுமல்லாமல் வேற மதத்தை குறிப்பிட்ட சில சாதிகளை சார்ந்த கேரக்டர்கள்கூட kid Galahad எனுமளவுக்கு நன்மையின் உண்மையின் நேர்மையின் சின்னமாக காட்டி ‘பொக்குதே!’ன்னு ஆடியன்ஸ் அழாத குறைக்கு தள்ளிவிடுகிறார்கள்.

    அந்தாதூன் படம் அப்படி மூணு  வகைலையும் வராதது பெரும் ஆறுதல்!இதுல கண் பார்வை தெரியாத ஆகாஷ் (ஆயுஷ்மான் குரானா) மீது மேற்சொன்ன மூன்று  அணுகுமுறைகளும் இல்லாமல் புது மாதிரியாக காட்டியுள்ளனர் .ஒருவகையில் இது ப்ளாக் காமெடி படம் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.ஆனா நம்மூரு ப்ளாக் காமெடி படங்கள்ல கூட அனுதாப அலைகளை காண முடியும்.
   நல்லவன் கெட்டவன் வரைமுறைகளுக்கு உட்படாத கேரக்டர்களே படத்தை மேலும் சுவாரசியமாக்கும்.100% மசாலா படங்களில் அது சாத்தியமே இல்லை என்றாலும் இடைநிலை சினிமா மற்றும் இடைநிலை+மசாலா படங்களில் அது சாத்தியமே.இந்த படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் அந்த ரகம்.ராதிகா ஆப்தே மற்றும் அந்த பழைய நடிகர் அணில் தவான்  தவிர எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களாகவே உள்ளனர்

   ஆகாஷ்  கூட கண் தெரியாத ஆசாமியாக நடித்து ஐநூறு ரூபாய்க்கு நல்ல வீடு (என்ஜிஓ மூலம்) பெற்று வாழ்கிறார்.அந்த சிறுவனும் காசுக்கு ஆசைப்பட்டு பல்வேறு சேட்டைகளை செய்கிறான்(ரகசியமா வீடியோ எடுத்து வச்சிக்கிட்டு அதை பார்க்க ஐம்பது ரூபாய் வசூலிப்பது).அந்த உறுப்பு திருடும் டாக்டர் மற்றும் அவருக்கு உதவும் அந்த லாட்டரி விற்கும் பெண் மற்றும் அவளுக்கு துணையா வரும் ஆசாமி எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்!
             உண்மையில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.ஆனா போகப்போக விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது.குறிப்பா ஆயுஷ்மான் கண் தெரியாதவன் மாதிரி நடிக்கிறவன் என்று தெரிந்ததுமே சுவாரசியம் கூடிடுது.அதுக்கப்புறம் அந்த பாடியை டிஸ்போஸ் செய்யும் சமயத்தில் இவன் விடாமல் பியானோ வாசிக்க எப்ப ஒழிவான்?என்று தபு எதிர்பார்க்க கிடைக்கும் ஒரு சின்ன கேப்பில் கணவன் வந்துவிட்டதாவும் அவனது பியானோ இசை கேட்டு கைதட்டி பாராட்டுவதாகவும் ஏற்கெனவே எடுத்த வீடியோ பதிவ்ளிருந்து ஆடியோவை ப்ளூடூத் ஸ்பீக்கர்ல போட்டு அவனை வெளிய அனுப்புறதும்,அப்புறம்  அந்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை மாடியில் இருந்து தள்ளி விடும் நேரத்தில் ஒலிக்கும் பீத்தோவன் 5th ம் அட்டகாசம்!
A Fifth of Beethoven :D 

          அதுபோல ராதிகா ஆப்தே ஆயுஷ்மான் காட்சிகளில் காமெடி நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு.பிறகு அவரை அம்போவென விட்டுட்டாலும் ஆயுஷ்மானை தேடி அவன் வீட்டுக்கு வரும்போது தபு ஏடாகூடமா நின்னுகிட்டு இருக்கும்போது டென்சன் ஆகி கத்திட்டு போவது பட ஆரம்பத்தில் கோபத்தோடு வண்டி ஓட்டும் காட்சிகளில் அவர் சரியாகவே பொருந்துகிறார்.

                சில சின்ன சின்ன விஷயங்கள் கவனித்து செய்துள்ளார் இயக்குனர்.உதாரணமாக ஒரு காலத்தில் தான் ஹீரோவாக நடித்து பிறகு மார்க்கெட்டே இல்லாமல் போன பிரமோத் சின்ஹா(அணில் தவான்)  யூட்யூபில் தனது பட பாடல்கள் காட்சிகளுக்கு வரும் கமண்டுகளுக்கு லைக் போட்டு நன்றி தெரிவிக்கும் காட்சியை சொல்லலாம்.அப்புறம் லாட்டரி விற்கும் சக்கு பார்வையற்ற ஆகாஷை ஒரு லாட்டரி சீட்டை தொட சொல்லி பக்கத்தில் உக்காந்திருக்கும் நபரிடம் “பார்வையற்றவர்கள் ஆனடவனின் ஆசி பெற்றவர்கள்.அவர்கள் தேர்ந்தெடுக்கும் சீட்டு நிச்சயம் பரிசு பெறும்”என்று சொல்லி நூறு ரூபாய் சம்பாதிப்பது,ஆயுஷ்மான் உண்மையில் குருடன்தானா இல்லையா?என்று போலீஸ் அதிகாரியும்  தபுவும் வெவ்வேறு தருணங்களில் சோதிக்கும் காட்சி ரணகளம்! படத்தின் இறுதியில் தான் கண் தானம் பெறவில்லை என்பதுமாதிரி காட்டிட்டு கடைசில அந்த கோக் டின்னை உதைப்பதோடு முடிப்பது இன்னொரு உதாரணம்! சமீபத்தில் ரசித்து பார்த்த(இப்படி சொல்ல வைக்கும் படங்களே அரிதாகிவிட்ட நிலையில்) படங்களுள் ஒன்று!



No comments:

Post a Comment